Publish Date: Sat, 25 Dec 2021 (13:27 IST)
Updated Date: Sat, 25 Dec 2021 (17:27 IST)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையொட்டி டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவர்.
நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும். இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள்.
விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள். இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.
ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு. பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது, இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.
மொத்தத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது. மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது.