இரு இமைகளும் மோதிக்கொள்ள மறுத்தன. கை விரல்கள் சற்று நடுங்கத் துவங்கின. உதடுகள் வறண்டு போயின...
ஒற்றை அறை மட்டுமே இருந்த வெளிச்சமற்ற சுவர்களில் கண்கள் துழாவின. அலமாரியில் சிதறிக் கிடந்த புத்தகங்களை நோட்டமிட்டான் ரமேஷ்.
"ஓய் ... நான் கன்டினிவ்வா மூணு ஹிட் கொடுத்துருக்கேன் . எங்கிட்டேயே லாஜிக் பத்தி பேசுறியா. போடா... போ... எல்லாம் எங்களுக்குத் தெரியும்..."
சடாரென எழுந்தவன், சிதறிக்கிடந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக விட்டத்தில் தூக்கி எறிந்தான். கொஞ்சம் ஆறுதல் அடைந்தவனாய் சுவரில் சாய்ந்தபடி சரிந்தான். சிசர்ஸ் பில்டரை பற்றவைத்து புகையை உள்ளே இழுத்தான். கண்கள் சமையல் செய்யும் இடத்தை நோக்கி திரும்பியது.
"அவனுக்குன்னு யார் சார் இருக்கா... டெய்லி நூறு ரூபாயும், ஒரு வேளை சோறும் போட்டா பின்னாலேயே இருப்பான். அவன் மூளைய தாராளமா யூஸ் பண்ணிக்கலாம்."
கண்களை மூடி ஃபேனை பார்த்தபடி படுத்தான்.
"கண்ணு நீ சொல்ற மாதிரி படம் எடுத்தால், நீ நேஷனல் அவார்டு வாங்கிகிட்டு ஏதாவது கையேந்திபவன் வயித்த கழுவிப்ப. ஆனா, நான் பிச்சக்காரனா தெருத்தெருவா அலையனும்..."
கண்கள் திறந்தன. கவிழ்ந்து படுத்தான்.
"40 வயசாவுது... 20 வருஷமா அஸிஸ்டென்ட் டைரக்டர்... மேதாவின்ற நெனைப்பு இல்லாம கொஞ்சம் வளைஞ்சு கொடுத்திருந்தான்னா, இந்நேரம் பெரிய டைரக்டாயிருப்பான். பொழைக்கத் தெரியாதவன்..."
மூளையிலும், மனதிலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்த ரீ ரெக்கார்டிங், விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
எழுந்தான் ரமேஷ். வெள்ளைத்தாள் சிக்கியது. பென்சில் மட்டுமே கிடைத்தது. எழுதத் தொடங்கினான்.
இந்த உலகத்தில் என்னைத் தவிர எல்லாரும் புத்திசாலிகள். என் வாழ்வில் நான் எடுக்கும் ஒரே புத்திசாலித்தனமான முடிவு, என் மரணம் - ரமேஷ்.
காகிதத்தை டைரியில் சொருகியவன், அணிந்திருந்த பழைய வேஷ்டியை இரண்டாக கிழித்தான். குடத்தை திருப்பிப் போட்டு ஃபேனைத் தொட்டான்.
"டேய்... ரமேஷ்... என்னடா பண்ற..."
காட்சியைக் கண்ட நண்பன் பிரேம் கத்தத் தொடங்கினான்.
"டேய் நீ போடா, டிஸ்டர்ப் பண்ணாத"
கொஞ்சம் சுதாரித்த பிரேம், "மச்சான் சாகப்போறியா? நோ ப்ராப்ளம். தாராளமா சாவு. ஆனா, என் டவுட்டை கிளியர் பணிணிட்டு சாவு"
"என்னடா" பற்களை கடித்தான்.
"நீ சாவு. அது உன் பிரச்சனை. உனக்குன்னு எவனும் இல்லை. நீ செத்தா நான் தான் கடைசி ஃபார்மாலிட்டிசை பண்ணனும். உனக்கு கொஞ்சமா நெருக்கமா இருக்கிறவன் நான்தான்."
"தேவையில்லை, கவர்ண்மென்ட் பாத்துக்கும்."
"எனக்கு தெரிஞ்சப்புறம் உன்னை அனாதைப் பொணமாக்க மாட்டேன்"
"சரி, என் பாடிய நீயே ஏதாவது பண்ணிக்கோ"
"உனக்கே அசிங்கமா இல்லை. இவ்ளோ நாள் எவனுக்கும் பாரம் இல்லாம இருந்துட்டு. செத்தப்புறம் எனக்கு பாரமா இருக்கியே."
"என்ன சொல்ற?"
"உன்னோட இறுதிச் சடங்குக்காவது காசு கொடுத்துட்டு சாவுடா"
யோசித்தான். "இல்லடா" என்றான்.
"மச்சான் பிரச்சனையே இல்லை. ஒரு இரண்டு மாசம் எங்கியாவது வேலை செய். நானே வாங்கித் தரேன். சம்பாதிச்சு ஒரு மூணாயிரம் கொடுத்துட்டு தற்கொலை பண்ணிக்கோ. கடைசி வரைக்கும் தன்மானத்தோட இரு."
"சரி. நீ கிளம்பு."
******
"
ஹலோ...""
நான்... ரமேஷ் பேசுறேன்" "
சொல்றா மச்சான் ரெடி பண்ணிட்டியா. சாலரி வந்துச்சா? எப்ப சாவப்போற?""
இல்லடா... சினிமா இல்லாத வாழ்க்கை புடிச்சுருக்கு. வாழும்போதே சாகணும்னு ஆசைபடறேன். இப்பதான் வாழவே தொடங்கியிருக்கேன். தேங்ஸ்டா." "
எதுக்கு?" "
அன்னிக்கு தடுத்ததுக்கு. நான், உன்னை கொஞ்ச நாள் கழிச்சு மீட் பண்றேன்!"