Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையுமா? - உண்மை என்ன?

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தால் மரபணு மாற்றமடையுமா? - உண்மை என்ன?
, திங்கள், 27 ஜூலை 2020 (23:50 IST)
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முடங்கி போயுள்ள நிலையில், அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த சில நம்பிக்கை அளிக்கும் செய்திகள் கடந்த வாரம் வெளியாயின.
 
ஆம், கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் எண்ணற்ற நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், அதில் முன்னோடியாக கருதப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் தந்து மேற்கொள்ளப்பட்ட முதல் சுற்றுப் பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த கொரோனா தடுப்பு மருந்து குறித்த உண்மை செய்திகளுக்கு போட்டியாக கடந்த வாரம் எண்ணற்ற போலிச் செய்திகளும் இணையத்தில் உலாவின. அவற்றில் சிலவற்றின் கூற்றுகளையும், அதன் உண்மைத்தன்மையையும் காண்போம்.
 
தடுப்பு மருந்தும் மரபணுவும்
 
 
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து ஆஸ்டியோபாத் கேரி மடேஜ் என்பவர் பதிவிட்ட தவறான தகவல்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
 
கேரி மடேஜ் தனது காணொளியில் கொரோனா தடுப்பு மருந்து அதை பரிசோதிப்பதற்காக செலுத்திக்கொள்பவரின் மரபணுவை மாற்றமடைய செய்கிறது என்ற தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
 
"கோவிட்-19 தடுப்பூசிகள் நம்மை மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறுகிறார்.
 
தடுப்பூசிகள் "நம் அனைவரையும் ஒரு செயற்கை நுண்ணறிவு இடைமுகத்துடன் இணைக்கும்" என்றும் அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார்.
 
உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் 25 கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில்கூட மனிதர்களின் மரபணுவை மாற்றக்கூடிய வகையிலோ அல்லது மனிதர்களை செயற்கை நுண்ணறிவு இடைமுகத்துடன் இணைக்கும் தொழில்நுடனோ உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
 
இந்த தடுப்பு மருந்துகள் அனைத்தும் கொரோனா வைரஸை அடையாளம் கண்டு போராடுவற்கு நம் உடல்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
"இது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு சிறந்த அறிவியல் வழிமுறையையும் பின்பற்றப்படவில்லை" என்பது போன்ற பிற தவறான கூற்றுகளையும் அவர் தனது காணொளியில் முன்வைத்துள்ளார்.
 
"புதிய தடுப்பு மருந்துகள் பரவலான பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னர் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுகின்றன" என்று பிபிசியின் சுகாதார பிரிவின் ஆசிரியர் மைக்கேல் ராபர்ட்ஸ் கூறுகிறார்.
 
இந்த கூற்றுக்கள் குறித்து கேரி மடேஜிடம் பிபிசி கருத்து கேட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
 
கடந்த மாதம் முதல் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த காணொளியை அமெரிக்கா, பிரிட்டன், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இதுவரை பார்த்துள்ளனர்
.
அதிவேகமாக மேற்கொள்ளப்படுகிறதா தடுப்பு மருந்து ஆராய்ச்சி?
 
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மனிதர்கள் மீதான ஆரம்பகட்ட பரிசோதனையின் முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டபோது அதன் நம்பகத்தன்மை குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்றது.
 
குறிப்பாக சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தாங்கள் "சோதனை எலிகளை" போன்று பயன்படுத்தப்படுவோம் என்பதால் தங்களுக்கு இந்த தடுப்பு மருந்து வேண்டாம் என்றும் இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய துரிதகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களது பதிவுகளில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதிவேகத்தில் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது பாதுகாப்பு குறித்த கவலைகளை சிலருக்கு ஏற்படுத்தி இருந்தாலும், தடுப்பு மருந்து பரிசோதனையின் அனைத்து மட்டங்களிலும் கடுமையான பாதுகாப்பு செயல்முறைகள் கடைபிடிக்கப்படுவதாக இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து குழுவின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் கூறினார்.
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
கடைசியாக பதிவு செய்யப்பட்டது 27 ஜூலை, 2020, பிற்பகல் 4:15 IST
தடுப்பு மருந்து குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உள்ள முன்னனுபவம், விரைவான நிதி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிர்வாக ஒப்புதல்கள், பெருத்த எதிர்பார்ப்பு, தானாக சோதனையில் பங்கேற்க முன்வந்த மக்கள் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் முதல் கட்டம் வேகமாக நிறைவடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால், தற்போது தொடங்கியுள்ள அடுத்த கட்ட பரிசோதனையில் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்பர் என்பதால் அவர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தால் பக்கவிளைவு ஏதாவது ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்தால் ஆபத்தான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும் அதில் பங்கேற்ற 16-18% தன்னார்வலர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனினும், பாரசிட்டமால் மூலம் அந்த பக்க விளைவுகளை நிர்வகிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஸ்பானிஷ் காய்ச்சலும், தடுப்பு மருந்துகளும்
 
சமூக ஊடகங்களில் வைரலாகும் மீம் ஒன்றில் 1918இல் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலால் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்தே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அது முற்றிலும் தவறான கருத்து.
 
முதலாக, அந்த காலகட்டத்தில் இதுபோன்ற நோய்த்தொற்றுகளுக்கு எவ்வித தடுப்பு மருந்தும் பயன்பாட்டில் இல்லை என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு கூறுகிறது.
 
அந்த காலக்கட்டத்தில் பரவிய காய்ச்சல் ஒரு வைரஸ் என்பது கூட அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
 
எனினும், ஸ்பானிஷ் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அதாவது, காய்ச்சல் தொற்று முதன்மையாகவும், வைரஸால் தூண்டப்பட்ட வலுவான நோயெதிர்ப்பு ஆற்றலால் நுரையீரலில் திரவம் சேர்ந்ததும் காரணமாக கூறப்படுகிறது.
 
ஓல்கா ராபின்சன், ஷயான் சர்தாரிசாதே மற்றும் பீட்டர் மவாய் ஆகியோர் அளித்த தகவல்களுடன்...
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கிய மத்திய அரசு