Publish Date: Fri, 09 Jul 2021 (23:45 IST)
Updated Date: Fri, 09 Jul 2021 (23:49 IST)
கன்றுக்குட்டியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வளவு குள்ளமான குட்டியான கன்றுக்குட்டியை பார்த்திருக்கிறீர்களா?
வங்க தேசத்தின் பிரபலமாகி இருக்கிறது குள்ளமான கன்றுக்குட்டி ராணி.
புட்டி அல்லது பூடான் வகையை சேர்ந்த 23 மாத கன்றுக்குட்டியான ராணியின் உயரம் வெறும் 51 சென்டி மீட்டர் மட்டும்தான். அதன் எடை 28 கிலோ.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சரிகிராமில் இருக்கும் பண்ணை ஒன்றில் வளரும் ராணியை காண, கொரோனா ஊரடங்கு நேரத்திலும் 15,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
விளம்பரம்
அன்டார்டிகாவில் புதிய தாவரத்தின் பெயர் 'பாரதி'
ஞாபக மறதிக்கு 'சாக்லேட்' மருந்தாகுமா?
உலகின் மிகச்சிறிய பசு இது எனக்கூறி அதன் உரிமையாளர் ஹசன் ஹௌலதார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.
"இதுபோன்ற ஒரு பசுவை நான் வாழ்நாளில் கண்டதில்லை" என்றார் ராணியை காண வந்த ரினா பேகம்.
வங்கதேசத்தின் தென் மேற்கில் இருக்கும் நாகான் மாவட்டத்தில் உள்ள வேறு ஒரு பண்ணையில் இருந்து ராணியை கடந்த ஆண்டு வாங்கினார் ஹசன்.
ராணிக்கு நடப்பதில் பிரச்னை இருப்பதாலும், மற்ற பசுக்களை கண்டு அச்சம் ஏற்பட்டதாலும், அதனை தனியாக வைத்திருந்ததாக கூறுகிறார் ஹசன்.
"ராணி அதிகம் சாப்பிட மாட்டாள். நாளொன்றுக்கு இரண்டு முறை சிறிய அளவில் தவிடு மற்றும் வைக்கோல் உண்பதுதான் வழக்கம்" என்கிறார் ஹசன்.
"ராணிக்கு வெளியில் சுற்றித்திரிவது பிடிக்கும். யாராவது தூக்கினால் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்."
'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' - கின்னஸ் சாதனை படைக்குமா?
இப்போது உலகின் மிகச்சிறிய பசு என்ற பட்டம் இந்தியாவில் உள்ள மணிக்யம் என்ற பசுவிடம் உள்ளது. இதன் உயரம் 61.1 சென்டி மீட்டர்.
கின்னஸ் சாதனை புத்தகக் குழுவினர் இந்தாண்டு ராணியை காண வருவார்கள் என பிபிசியிடம் கூறினார் ஹசன்.
முஸ்லிம் பண்டிகையான ஈத் திருநாளுக்கு இன்னும் சில வாரங்களே இருக்க ராணியை விற்றுவிடுவார்கள் அல்லது பலிகொடுத்து விடுவார்கள் என பேசப்பட்டு வரும் சூழலில், அப்படிப்பட்ட எந்தத் திட்டமும் இல்லை என்று பண்ணை அதிகாரிகள் கூறினர்.