Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்கள்!

ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்கள்!
, திங்கள், 25 ஜூலை 2022 (15:36 IST)
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 'செய்றகை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் சிறிய ட்ரோன்களை' வீழ்த்துவதற்காக வலைகளை வீசும் ட்ரோன்கள் இந்த பகுதிகளைப் பாதுகாக்க உதவும்.

கத்தாரின் உள்துறை அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டெம் டெக்னாலஜிஸ் (Fortem Technologies) நிறுவனம் இதற்கான ட்ரோன்களை வழங்கும். பொதுவாக ட்ரோன் தாக்குதல்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த அதிகரித்துவரும் அச்சத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

அதன் செயல்முறை கட்டமைக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை வீழ்த்துவதற்கு பாதுகாப்பான வழியாக இருக்கும் என்றும், ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கிறது என்று ஃபோர்டெம் கூறுகிறது.

இத்தகைய ட்ரோன்கள் வலைகளை வீசுவதன் மூலம் அதன் இலக்கு ட்ரோனை வலையில் சிக்க வைக்கிறது. பின்னர் அது மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படலாம். பெரிய ட்ரோன்களுக்கு, ஒரு பாராசூட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு வலை ஏவப்படுகிறது. அதில் சிக்கிய 'இலக்கு ட்ரோன்கள்' மெதுவாக தரையில் விடப்படுகிறது.

"உலகக் கோப்பை நடைபெறும் இடம் முழுவதும் மிகச் சிறிய ரேடார்களை பயன்படுத்தி இலக்குகள் அடையாளம் காணப்படுகின்றன, இது வான்வெளியின் முழுமையான பார்வையைத் தருகிறது," என்று ஃபோர்டெம் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான டிமோதி பீன் பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு தளங்களில் ட்ரோன்கள் "நேரடியாக செயல்பட்டு, பாதுகாப்பு அளித்ததாக " அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ட்ரோன்களின் சலசலப்பு இருக்காது. ஏனெனில் இயந்திரங்கள் 'அந்த இடத்திலிருந்து ஒரு மைல் அல்லது அதற்கும் அப்பால்' தங்கள் வேலையைச் செய்கின்றன என்று பீன் மேலும் கூறினார்.

தீவிரவாதிகள் முன் திட்டமிடப்பட்ட விமானப் பாதைகளில் ட்ரோன்களை ஏவக்கூடும் என்று ஃபோர்டெம் நிறுவனம் கூறுகிறது. "தீவிரவாதிகள் ஜாய்ஸ்டிக்குகளைப் (Joystick) பயன்படுத்தாததே எங்கள் வணிகம் உயரக் காரணம். தீவிரவாதிகள் உங்கள் வாகன நிறுத்துமிடத்தில் ஜாய்ஸ்டிக் கொண்டு வந்து ட்ரோன்களை இயக்கமாட்டார்கள். இந்த ட்ரோன்கள் ப்ரோகிராம் செய்யப்பட்டவை... அதனால் அவற்றை தடுக்க முடியாது," என்கிறார் பீன்.

மற்ற விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை ( anti-drone systems) பயன்படுத்தியதாக இந்த நிறுவனம் கூறுகிறது.மேலும், யுக்ரைனுக்கு அதன் அமைப்பின் போர்ட்டபிள் பதிப்புகளை நன்கொடையாக அளித்துள்ளது. மேலும், பிரிட்டன் விமான நிலையங்களுக்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை செயல்படுவதாகவும் கூறியுள்ளது.

தோஷிபா மற்றும் போயிங் நிறுவனங்களின் ஆதரவைப் பெற்ற உட்டாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கும் உலகக் கோப்பையில் கத்தார் உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றும்.

ஆயுதப் போட்டி

தொழில்நுட்பம் மிகவும் அணுகக்கூடியதாகிவிட்டதால், தீவிரவாதிகளின் ட்ரோன்கள் பயன்பாடுவது அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது என்று பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் டன் கூறுகிறார்.

இதற்கு, 2015ம் ஆண்டு பாரிஸ் நகரில் தோல்வியுற்ற தற்கொலைப்படை தாக்குதலை அவர் மேற்கொள் காட்டுகிறார். அப்போது, ​​ஸ்டேட்டி பிரான்ஸ் மைதானத்தை அடைய முயற்சி நடந்தது. தரை வழியாக தீவிரவாதிகளால் நுழைய முடியாத மைதானத்தில், ஒரு ட்ரோன் நுழைய முடிந்திருக்கும் என்று அவர் கூறுகிறார்.

ஏமன் நாட்டிலும், யுக்ரைனிலும் நடக்கும் போர்களில் வணிக ட்ரோன்கள் ஆயுதங்களாக மாற்றியமைக்கப்பட்டதால், அதுகுறித்த கவலைகள் ஓரளவு அதிகரித்திருப்பதாக மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவ் ரைட் கருதுகிறார்.

சிறிய ட்ரோன்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஃபோர்டேம் (Fortem) போன்ற அமைப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். ஒரு ஐரோப்பிய நிறுவனத்திற்காக இதேபோன்ற அமைப்பில் பணிபுரியும் டாக்டர் ரைட், அவர்கள் ஒரு இடத்திற்கு வெளியில் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்துவதாக நம்புகிறார்.

மேலும், இது பாதுகாப்பு பணியாளர்களுக்கு பதிலடி அளிக்க அதிக நேரத்தை அளிக்கிறது என்று அவர் கூறுகிறார். ஆனால் , இவை ஆயுதப் போட்டியை ஒரு படி மேல் எடுத்து செல்கிறது என்று எச்சரித்த அவர், தாக்கும் ட்ரோன்களின் வேகம் அதிகரிக்கும் போது, ​​அவற்றை நிறுத்துவது கடினமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

தாக்குபவர்கள் ட்ரோன்கள் மூலம் மேலும் சூழ்ச்சி செய்யக் கூடும். ஒரு வினாடிக்குள் பூஜ்ஜியத்திலிருந்து ஒரு மணிநேரத்தில் 97கிமீ வேகத்தில் செல்வது போல் மிக வேகமாக முடுக்கிவிடக்கூடிய ஒரு ட்ரோனை தனது குழு உருவாக்கியுள்ளதாக டாக்டர் ரைட் கூறினார்.

ஒரு சமயத்தில் பல தாக்குதல்கள் நடத்தும் ட்ரோன்களும் ஒரு சவாலாக இருக்கும். ஏமனுடனான போரில், "இந்த விஷயத்தில் குழுக்கள் ஒரே நேரத்தில் எல்லைக்கு அனுப்பப்படுவதால், அந்த பிரச்ச்னை வளரத் தொடங்குவதை சவூதிகள் ஏற்கனவே கவனிக்கிறார்கள்," என்று டாக்டர் ரைட் கூறினார்.

ஆனால், தாக்குபவர்கள் எதிர் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அனைத்து ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தாக்குதல்கள் நடத்துவதை கடினமாக்குகின்றன. "நமது எதிர் நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டால், அந்த முயற்சி அர்த்தமற்றதாகிவிடுகிறது என்பதல்ல. எப்படியானாலும், உங்கள் எதிரிகளுக்கு பாதிப்பை உருவாக்குகிறீர்கள்," என்று டாக்டர் ரைட் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் இளையராஜா!