Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோதியை இந்திய மில்லினியல் இளைஞர்கள் ஆதரிப்பது ஏன்?

நரேந்திர மோதியை இந்திய மில்லினியல் இளைஞர்கள் ஆதரிப்பது ஏன்?
, புதன், 6 அக்டோபர் 2021 (13:29 IST)
உலகிலேயே மிக இளம் வயது மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. 1981 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள், இந்திய மக்கள் தொகையில் 40 கோடிக்கும் (400 மில்லியனுக்கும்) அதிகமானோர் உள்ளனர். இந்திய இளைஞர்கள் தங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என எழுத்தாளர் விவன் மார்வாஹா ஆலோசிக்கிறார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில், என் புத்தகம் தொடர்பான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய மில்லினியல்களின் பொருளாதார விருப்பங்கள், சமூகப் பார்வை, அரசியல் அணுகுமுறைகள் பற்றி நான் ஆராய்ந்தபோது, ​​நாட்டின் அப்போதைய பொதுத் தேர்தல்கள் குறித்து இளம் இந்தியர்களுடன் பேசிக்கொண்டு, வடக்கு மற்றும் தென் மாநிலங்கள் முழுவதும் உள்ள சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் முகாமிட்டேன்.

ஒவ்வொரு நகரத்திலும், நான் இளைஞர்களை சந்தித்தேன், அவர்கள் அனைவரும் வேலையின்றி, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்ததாகத் தெரிந்தது.

வழக்கமான அரசியல் அறிவின்படி, பிரதமர் நரேந்திர மோதி சிக்கலில் இருந்தார்: நாடு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியவேலையின்மையை அனுபவித்து வந்தது. அது இந்தியாவின் மிகப் பெரிய இளைஞர் பட்டாளத்தை, உலகின் ஒற்றை - பெரிய தொழிலாளர் சக்தியை பாதித்தது.

பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் சென்ற எல்லா இடங்களிலும் மனச்சோர்வு நிலவியது. நான் நேர்காணல் செய்த பல ஆயிரக்கணக்கானோர், 30 வயதிற்குட்பட்டவர்கள் கூட, அடிப்படை பொருட்களை வாங்கக் கூட தங்கள் குடும்பங்களை நம்பி பெற்றோருடன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த மக்களில் பெரும்பாலானோர், கடந்த 2014 ஆம் ஆண்டு, பரந்த அளவிலான வளர்ச்சி மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக லட்சக் கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தனர்.

பாஜக 2014ஆம் ஆண்டு தேர்தலை விட கூடுதல் இடங்களில் வென்று, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வழக்கமான அறிவு தலைகீழாக மாறியது.

இளம் இந்தியர்கள் மோதியின் பின்னால் உறுதியாக இருந்தனர். தேர்தலுக்கு பிந்தைய தரவு இதை உறுதி செய்தது, 18 முதல் 35 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

பல நாடுகளில், இப்படிப்பட்ட வெற்றி பொருளற்றதாக இருக்கலாம்: அதிகம் முன்னேறாத, வாக்காளர்களின் நம்பிக்கையை உடைத்த, இந்த ஆட்சியின் கீழ் பல ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட நிலையில் இருந்த இளம் வாக்காளர்கள் ஏன் பாஜகவை மீண்டும் வெற்றி பெற வைத்தனர்?

இந்த கேள்விக்கான விடையும், வழக்கமான இந்திய தேர்தல் அறிவை மீறியது, ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வந்தது.

கடந்த தேர்தலில் மில்லினியல்கள் முன்னிலை வகித்ததால், இந்திய அரசியல் ஓர் அடிப்படை மறுசீரமைப்பைக் கண்டுவிட்டது: இளம் வாக்காளர்கள் தங்களைப் போல பேசும், பிரார்த்தனை செய்யும், அவர்களைப் போல தோற்றமளிக்கும் தலைவர்களை விரும்புகிறார்கள்.

பல தசாப்த காலமாக, இந்தியாவை ஆங்கிலம் பேசும், மேற்குலக நாடுகளில் படித்த தொழில்நுட்ப வல்லுநர்களால் நிர்வகிக்கப்பட்டது, அவர்களுக்கும் நாட்டின் பெரும்பான்மையான விவசாயம் மற்றும் வட்டார மொழி பேசும் மக்களுக்கும் பொதுவில் பகிர்ந்துகொள்ள குறைவாகவே இருந்தது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளின் பல உறுப்பினர்கள் அடிமட்டத்திலிருந்து வந்திருந்தாலும், டெல்லியில் கலாச்சார மற்றும் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் அவ்வாறு இல்லை.

ஆர்வமுள்ள இளம் இந்தியர்கள் இன்று தங்களைப் பாதுகாப்பார்கள் என்று நம்பும் முன்மாதிரிகளைத் தேடுகிறார்கள், மேலும் அவர்கள் கதைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் அரசியல்வாதிகளால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். மொழி குறிப்பாக ஓர் உணர்வுபூர்வமான பிரச்சனையாக இருக்கிறது.

ஆங்கிலம் நீண்ட காலமாக இந்திய உயரடுக்கின் மொழியாகவும், சமூகத்தில் மேல்நிலைக்குச் செல்ல விரும்பும் நடுத்தர வர்க்க இந்தியர்களின் விருப்பமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில், இந்தி பேசும் அரசியல்வாதிகளுக்கு வாக்காளர்களால் வெகுமதி அளிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்தி பேசும் மக்கள் அதிகமிருக்கும் மாநிலங்களிலிருந்து, நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் வம்சாவளியினர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கிட்டத்தட்ட துடைத்தெறியபட்டது.

நான் இந்திய மில்லினியல்களுடன் பேசியபோது, ​​நியூயார்க், லண்டன், சிட்னியில் பார்வையாளர்களுக்கு மோதி எப்படி இந்தியில் உரைகளை நிகழ்த்தினார், அது அவர்களை எவ்வளவு பெருமைப்படுத்தியது என்பதைப் பற்றி அவர்கள் என்னிடம் கூறினர்.
நிலையற்ற மற்றும் கொந்தளிப்பான பொருளாதாரத்தில், இந்திய மில்லினியல்கள் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதியளிக்கும் தலைவர்களைத் தேடுகின்றனர், மோதியும் அவரது கட்சியின் செய்தியும் இந்த உணர்வை ஈர்த்தது, தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது.

2019ஆம் ஆண்டு காஷ்மீரில், புல்வாமா குண்டுவெடிப்பு மற்றும் பாகிஸ்தானின் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு - ஒவ்வொரு பாஜக தலைவரும் தங்கள் ட்விட்டர் கணக்கில்"செளகிதார்" (காவல்காரன்) என்கிற பெயரைச் சேர்த்து, அனைத்து எதிரிகளிடமிருந்தும் இந்தியர்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளும் அடக்கம்.

இந்தியாவின் இந்து பெரும்பான்மை உணர்வில் இருந்த பலருக்கும், அவர்களுக்குப் பின்னால் பாஜக இருப்பதாகக் கூறியது.அவர்களுக்கு நன்மைகள், பொதுச் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதாக உறுதி அளித்தது,

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, கட்சி பொது பல்கலைக்கழகங்களில் 10% இடங்களையும், அரசாங்கப் பணிகளையும் பொது சாதிக் குழுக்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கி, நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டை 60 சதவீதமாக உயர்த்தியது.

அது முன்னேறிய சாதி இந்துக்களை இலக்காகக் கொண்ட, அவர்களை திருப்திப்படுத்தும் தந்திரமாகும். நாடு முழுவதும் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதால், அந்த வாக்காளர்களுக்கு அரசு வேலைகளைப் பாதுகாப்பது கட்டாயமானது.

1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு பல தசாப்தங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டதால், இந்தியாவின் அடுத்த தலைமுறை - அதன் மில்லினியல்கள் வெறுமனே பிழைப்பதை விட கூடுதலாக விரும்புகின்றனர்.

ஸ்மார்ட்போன் யுகத்தில், தங்கள் வளர்ச்சி குன்றிய நகரங்களுக்கு அப்பால், பிரகாசிக்கும் நகரங்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளத் தொடங்கினர். அவ்உலகில் அவர்கள் செழிக்க விரும்புகின்றனர்.

நரேந்திர மோதியின் அரசு வேலைவாய்ப்பு வளர்ச்சியையோ, தன் பொருளாதார வாக்குறுதிகளையோ நிறைவேற்றவில்லை என்றாலும், மில்லினியல்களின் மொழியையும் விருப்பத்தையும் மோதி பேசினார். அவர்களுக்கு புல்லட் ரயில்கள், உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், உலக அரங்கில் பிரகாசிக்கும் ஒரு நாடு போன்றவைகளைப் பேசினார்.

மோதியின் சொந்த உடை கூட விரும்பத்தக்கதாக இருந்தது. பொதுவாக வெள்ளை நிற குர்த்தா பைஜாமா தான் இந்திய ஆண் அரசியல்வாதிகளுக்கான நிலையான சீருடையாக இருந்தது. ஆனால், மோதியின் ஆடைகள் விலையுயர்ந்த, சிறப்பாக தயாரிக்கப்பட்ட, வண்ணமயமான ஆடைகளாக இருந்தது. அது அவரை மட்டுமின்றி, மொத்த நாட்டையும் (அவரது பார்வையில் ஒத்துப் போகிறீர்கள் என்றால்) உயர்த்திக் காட்டுவதாக இருந்தது.

பாரம்பரிய அரசியல் அறிவுக்கு மாறாக, மோதி இளம் மில்லினியல் இளைஞர்களின் இந்திய கலாச்சார மற்றும் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்கள் மோதிக்கு பின்னால் இருப்பார்கள்.

விவன் மார்வாஹா 'வாட் மில்லினியல்ஸ் வான்ட்' (பெங்குயின் வைக்கிங்) என்கிற புத்தகத்தை எழுதியவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!