Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

“கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?
, வியாழன், 21 அக்டோபர் 2021 (12:46 IST)
ஏழை நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பொருள், கொரோனா நெருக்கடி `வெகு சுலபமாக 2022 வரை நீளும்` என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவரான ப்ரூஸ் அல்வேர்ட் தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆப்ரிக்காவில் வெறும் 5 சதவீதம் பேருக்குதான் தடுப்பு மருந்து கிடைத்துள்ளது. இது பிற நாடுகளில் 40 சதவீதமாக உள்ளது.

பிரிட்டன் மொத்தமாக தடுப்பு மருந்து தேவைப்படும் நாடுகளுக்கு 10 கோடி தடுப்பு மருந்துகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது ஆனால் இதுவரை வெறும் ஒரு கோடிக்கும் மேலான தடுப்பு மருந்துகளையே வழங்கியுள்ளது.

"வளர்ந்த நாடுகள் தடுப்பு மருந்து பெறுவதற்கான தங்களின் வாய்ப்பை குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும், அப்போதுதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு முன்னுரிமை வழங்க முடியும்" என அல்வெட் தெரிவித்துள்ளார்.

G7 மாநாட்டில் வளர்ந்த நாடுகள் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். எனவே உடனடியாக அதுகுறித்து ஆய்வு செய்து எவ்வளவு தடுப்பு மருந்துகளை இதுவரை அளித்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
`நாம் கொடுத்த வாக்கின் பாதையில் செல்லவில்லை`. நாம் இந்த நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் அல்லது பெருந்தொற்று மேலும் ஒரு வருடத்திற்கு நீண்டு விடும் என்றார்.

தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான மக்கள் தடுப்பு மருந்து அமைப்பு - ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக வளர்ந்த நாடுகளும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அளித்த வாக்குறுதிகளில் ஏழு டோஸ்களில் ஒரு டோஸ் மட்டுமே ஏழை நாடுகளுக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகள் அல்லது அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கே அதிகப்படியான கொரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒப்பிட்டால் ஆப்ரிக்காவில் இதுவரை 2.6 சதவீதம் டோஸ் தடுப்பு மருந்துகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.

ஓக்ஸ்ஃபேம் மற்றும் ஐநாஏய்ட்ஸ் (Oxfam and UNAids) போன்ற தொண்டு நிறுவனங்கள் பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தங்களின் மக்களுக்காக தடுப்பு மருந்து கொள்முதல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளன. இந்த கோவேக்ஸ் திட்டம் சர்வதேச அளவில் தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் சம்மாக கிடைக்க ஐநா ஆதரவுடன் உருவாக்கப்பட்ட திட்டம்.

தடுப்பு மருந்தை வழங்குவதாக உறுதியளித்திருந்த ஜி7 நாடுகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடியான ஒப்பந்தத்தை மேற்படுத்திக் கொண்ட பிறகு கோவேக்ஸ் திட்டத்தில் தடுப்பு மருந்தை அளிக்கும் முடிவை நிறுத்தின.

பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கோவேக்ஸ் திட்டத்திற்கு நிதி அளித்து தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ளலாம். ஆனால் அவர்கள் தங்களின் ஒப்பந்தங்களின் மூலம் ஏற்கனவே மில்லியன் கணக்கான டோஸ்களை பெற்றுவிட்டதால் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் அவர்கள் தடுப்பு மருந்துகளை பெறுவது நியாயமற்றது என ஆக்ஸ்ஃபேம் அமைப்பின் சர்வதேச சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் கோவேக்ஸ் மூலம் தடுப்பு மருந்துகளை பெற்றுவிட்டால், அந்த திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்தை பெற காத்திருக்கும் ஏழை நாடுகள் மேலும் காத்திருக்க நேரிடும் என அவர் எச்சரிக்கிறார்.

இருப்பினும் கடந்த வருடம் 548 மில்லியன் பவுண்ட் நன்கொடை கொடுத்து கோவேக்ஸ் திட்டத்தை தொடங்கிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என அந்நாடு தெரிவித்துள்ளது.

கனடா அரசு தற்போது தாங்கள் கோவேக்ஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் தங்களின் ஒப்பந்தம் மூலம் போதுமான தடுப்பு மருந்துகள் கிடைத்துவிட்டால் கோவேக்ஸ் மூலம் தாங்கள் பெற்ற தடுப்பு மருந்துகளை திரும்ப கொடுத்து விடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அவற்றை மீண்டும் வளரும் நாடுகளுக்கு வழங்கலாம் என்றும் கனடா தெரிவித்துள்ளது.

கோவேக்ஸ் திட்டம் மூலம் இந்த வருட இறுதியில் 2 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் இதுவரை 371 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளே வழங்கப்பட்டுள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை!