கேரளாவில் தக்காளி காய்ச்சல் என்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
	
 
									
										
								
																	
	
	 
	தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை எளிமையாக விளக்குகிறது இந்த கட்டுரை.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
	 
	கை, பாதம், வாய் நோய் என்பதைதான் கேரளாவில் தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர் என்கிறார் தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. குழந்தைசாமி. இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கை, பாதம், வாய் நோய் குறிப்பாக காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும்.
 
									
										
								
																	
	 
	இதுவே என்டிரோ வைரஸ் 71 என்ற வைரஸால் ஏற்படும்போது பாதிப்பு தீவிரமாகவுள்ளது. இந்த வைரஸ்கள் என்டிரோவைரஸ் வகையை சேர்ந்தவை. "கேரளாவில் வந்திருப்பது காக்சாக்கி வைரஸாகதான் தெரிவதாக ஆரம்பக் கட்ட சோதனைகள் சொல்கிறது. இது மிதமாக பாதிப்புகளையே ஏற்படுத்தும். தொற்று பாதிக்கப்பட்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும்" என்கிறார் குழந்தைசாமி.
 
									
											
									
			        							
								
																	
	 
	தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
 
									
					
			        							
								
																	
	 
	காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல். பசியின்மை, ஓரிரண்டு நாட்களில் தோலில் அரிப்பு. பின்னர் அங்கு சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறும். சில நேரங்களில் அவை கொப்புளங்களாகவும் மாறும்.
 
									
					
			        							
								
																	
	 
	தக்காளி காய்ச்சல் பரவக்கூடிய நோயா?
	 
 
									
					
			        							
								
																	
	இந்த காய்ச்சல் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிறது. தக்காளி காய்ச்சல் மிதமாக பரவக்கூடிய நோய். சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் மூலம் பரவலாம். தொற்று பாதிக்கப்பட்ட முதல் வாரத்தில் நோய் அதிகமாக பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
 
									
					
			        							
								
																	
	 
	தக்காளி காய்ச்சலை எவ்வாறு தடுக்கலாம்?
 
									
					
			        							
								
																	
	 
	சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம்.
 
									
					
			        							
								
																	
	குறிப்பாக குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
 
									
					
			        							
								
																	
	கழிவறைக்கு சென்ற பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
	குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
	 
 
									
			                     
							
							
			        							
								
																	
	தக்காளி காய்ச்சலுக்கான சிகிச்சை என்ன?
	 
 
									
			                     
							
							
			        							
								
																	
	இதற்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. எனவே இதன் அறிகுறிகளான காய்ச்சல், வலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கான சிகிச்சையே வழங்கப்படும். இருப்பினும் "இது கொரோனா போன்றோ, நிப்பா வைரஸ் போன்றோ அச்சப்படக்கூடிய பாதிப்பாக இல்லை" என்கிறார் குழந்தைசாமி.
 
									
			                     
							
							
			        							
								
																	
									
			                     
							
							
			        							
								
																	
	இதுகுறித்து பேசிய தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணன், "இதுகுறித்து யாரும் கவலைக் கொள்ள வேண்டாம். கேரளத்தில் பரவி வரும் வைரஸ் குறித்து கேட்டறிந்து தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்று தெரிவித்தார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வைத்துள்ளனர். மற்றபடி தக்காளிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த காய்ச்சலில் வரக்கூடிய கொப்புளங்கள் சிவப்பாக இருப்பதால் இதனை தக்காளி காய்ச்சல் என்கின்றனர்
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இதற்கு முந்தைய பாதிப்புகள்?
	 
 
									
			                     
							
							
			        							
								
																	
	1997 ஆம் ஆண்டுக்கு பிறகு என்டிரோ வைரஸ் 71ஆல் உருவாகும் கை, பாதம், வாய் நோய் ஆசிய கண்டத்தில் பல்வேறு நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் தாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் இந்த நோய் 76 ஆயிரம் குழந்தைகளை பாதித்தது. இந்தியாவிலும் இந்த நோய் அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.