Publish Date: Tue, 14 Sep 2021 (10:30 IST)
Updated Date: Tue, 14 Sep 2021 (10:34 IST)
ஆப்கானிஸ்தானில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தில் குறைந்தபட்சம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிபிசிக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
ஒரு காணொளியில், பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் ராணுவ உடை அணிந்த ஒரு நபரை சுற்றி தாலிபன் போராளிகள் நிற்கிறார்கள்.
ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. அவர் தரையில் விழுகிறார். கொல்லப்பட்டவர் ராணுவத்தைச் சேர்ந்தவரா என தெளிவாகத் தெரியவில்லை.
அப்பகுதியில் ராணுவ உடை அணிவது சாதாரணமானது என்பது கவனிக்கத்தக்கது.
அக்காணொளியில் அவருக்கு அருகில் நிற்பவர் அவர் ஒரு பொதுஜனம் என்று கூறுகிறார். இப்படி ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அப்படி கொல்லப்பட்டவர்களில் அதில் அப்துல் சமி என்கிற வியாபாரியும் ஒருவர். “நான் ஒரு ஏழை வியாபாரி, எனக்கும் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அப்துல் சமி தாலிபன்களிடம் கூறியதாக உள்ளூரில் இருப்பவர்கள் பிபிசியிடம் கூறினர்.
அவர் தாலிபன்களுக்கு எதிரணியில் இருப்பவர்களுக்கு சிம் கார்டுகளை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு அவரது சடலம், அவரது வீட்டருகில் வீசப்பட்டது. அவரது உடலில், அவரை துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் உடலைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.