Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் இருந்து சிரியாவின் ஐ.எஸ். அமைப்புக்கு அதி நவீன முறையில் செல்லும் நிதி

பாகிஸ்தானில் இருந்து சிரியாவின் ஐ.எஸ். அமைப்புக்கு அதி நவீன முறையில் செல்லும் நிதி
, சனி, 23 ஜனவரி 2021 (23:23 IST)
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், ஒரு கும்பலைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். இந்தக் கும்பல் சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ் போராளிகளுக்கு டிஜிட்டல் நாணயமான 'பிட்காயின்' மூலம் நிதி வழங்கி வந்தது என்று கூறப்படுகிறது.
 
கராச்சியில் உள்ள என்.இ.டி. பல்கலைக்கழக மாணவர் முகமது ஒமர் பின் காலித் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐ எஸ் பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்ட மாணவரின் தாய் டிசம்பர் மாதம் இவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகனுக்கு "எந்த அமைப்புடனும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
 
பயங்கரவாத தடுப்புத் துறை டி.ஐ.ஜி உமர் ஷாஹித், காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜா உமர்-உடன் இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது உமர் பின் காலித், கென்ட் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்றும், இதற்கு முன், டிசம்பர் 17 அன்றும் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
 
சிலர் பாகிஸ்தானில் இருந்து நிதி சேகரித்து இந்த நிதியை ஐ எஸ் அமைப்புக்குப் பல வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பயங்கரவாத எதிர்ப்புப் போலீசுக்குத் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
 
கைது செய்யப்பட்ட நேரத்தில் முகமது உமர் பின் காலிதிடமிருந்து இரண்டு மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த நேரத்தில் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனின் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக உமர் ஷாஹித் ஹமீத் தெரிவித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பாகிஸ்தானில் இருந்து பணம் சேகரித்து சிரியாவுக்கு அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
 
"குற்றம் சாட்டப்பட்டவர் சிரியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுடன் பெண்கள் மூலம் நேரடித் தொடர்பு கொண்டுள்ளார்." என்பதும் தெரியவந்துள்ளது.
 
தெரியாத நபர்கள் ஈஸி பே ஆன்லைன் பணப் பரிமாற்றச் செயலி மூலம் பணம் அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.
 
பணம் உமருக்கு அனுப்பப்பட்டது, அவர் இந்தப் பணத்தை ஹைதராபாத்தில் உள்ள ஜியா என்ற நபருக்கு ஈஸி பே மூலம் அனுப்பியுள்ளார். அந்த நபர் இந்தத் தொகையை டாலர்களாக மாற்றி சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு பிட்காயின் மூலம் அனுப்பினார்.
 
பணத்தைப் பெற்ற பிறகு, இவர்கள், உமர் பின் காலித் அவர்களுக்குத் தெரிவித்தனர் என்றும் இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
 
பிபிசியிடம் பேசிய காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜா உமர் கத்தாப் முதன்முறையாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நவீன நாணய முறைப் பரிமாற்றம் செய்யப்படுவது வெளிவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
 
மேலும் விளக்கும் அவர், "உமர் கருத்தியல் ரீதியாக ஐ எஸ் அமைப்புடன் இணைந்திருந்தார்; தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல. சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உருது மொழி பேசத் தெரிந்தவர்கள். ட்விட்டர் மற்றும் பிற சமூக தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு அனுதாபம் பெறவும் தெரிந்தவர்கள். அதற்குப் பிறகு அவர்கள் நிதி கேட்கிறார்கள். இது சம்பந்தமாக, யாராவது பணம் செலுத்தத் தயாராக இருந்தால், அவர்கள் உமரைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கிறார்.
 
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் உமர் தலைமறைவாகியதாக பயங்கரவாத எதிர்ப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் கராச்சியிலிருந்து ரயிலில் தப்பிச் செல்ல இருந்ததாகத் தகவல் கிடைத்தது. எனவே, அவர் கென்ட் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
யார் இந்த முகமது உமர் பின் காலித்?
 
முகமது ஒமர் பின் காலித் NED பொறியியல் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மாணவர். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தைபா காலித் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிசம்பர் 17 அன்று உமர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதற்கு மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் இதற்கு எந்த அரசியல் கட்சியுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
உள்துறை, டி.ஜி. ரேஞ்சர்ஸ் மற்றும் தொடர்புடைய பிறருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பே, கராச்சி பல்கலைக்கழக மாணவர்கள் ஐ எஸ் அமைப்பினருடனுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
 
அண்மை ஆண்டுகளில், சஃபுரானில் இஸ்மாயிலி சமூகப் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சஃபுரன் சம்பவத்தில் தொடர்புடைய சமூக சேவகர் சாத் அஜீஸ், சபீன் மஹ்மூத்தின் கொலைக்கு சூத்திரதாரியும் ஆவார் என்று காவல் துறை கூறுகிறது.
 
அவர் கராச்சி பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகத் துறையில் பயின்று வந்தார். குற்றம் சாட்டப்பட்ட அவரது சகா முகமது அசார் இஷ்ரத் மின்னணு பொறியாளராக இருந்தார்.
 
இது தவிர, குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான ஹபீஸ் நசீர் உசேன் கராச்சி பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளில் எம்.ஏ பட்டம் பெற்றிருந்தார்.
 
பிட்காயின் என்பது என்ன?
பிட்காயின் என்பது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் முதன்மையாக மின்னணு தளத்தில் பணம் செலுத்தும் ஒரு முறையாகும். பொருட்களை வாங்கவும் இதைப்பயன்படுத்தலாம். ஆனால் தற்சமயம், இதைச் சில இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம், வீடியோ கேம்கள் அல்லது சமூக வலைப்பின்னல்களில் பணம் செலுத்தலாம்.
 
கிரிப்டோ நாணயம் எனப்படும் இவை, உலகம் முழுவதும் பல நாடுகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இருப்பினும், மே 2017 இல் பாகிஸ்தானில், இந்த நாணயத்தின் பயன்பாடு, கொள்முதல் மற்றும் விற்பனை சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் ஸ்டேட் பேங்க் அறிவித்தது.
 
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, பிட்காயினின் மதிப்பு வரலாற்றில் மிக உயரத்தை எட்டியது. ஒரு பிட்காயினின் விலை முப்பதாயிரம் அமெரிக்க டாலர் மதிப்பைத் தாண்டியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்கள் கைது !