Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக நாடுகளுக்கு கண்பார்வை தரும் இலங்கை

உலக நாடுகளுக்கு கண்பார்வை தரும் இலங்கை

உலக நாடுகளுக்கு கண்பார்வை தரும் இலங்கை
, வியாழன், 4 பிப்ரவரி 2016 (15:33 IST)
கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.
 

இலங்கையில் இருந்து மற்ற பல நாடுகளுக்கு கருவிழிப்படலம் அனுப்பி வைக்கப்படுகிறது
 
உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 
இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
 
கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும்கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.
 
webdunia

கருவிழிப்படலம் தானமாக கிடைத்ததால் பார்வை திரும்பப்பெற்ற பரமன் மஹாலிங்கம்
 
உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும்போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு.
 
அதைவிட முக்கியமாக, பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச்சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
 
webdunia

கருவிழிப்படல பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்புக்கு இலங்கையில் முழுமையான தீர்வு சாத்தியமாகியுள்ளது
 
ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை.
 
கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
 
இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது.
 
இந்த பிறவியில் நாம் கண்களை தானமாக வழங்கினால், மறுபிறவியில் தெளிவான பார்வையுடனான வாழ்க்கை கிடைக்கும் என்று தான் நம்புவதாக, கொழும்பு அரச மருத்துவமனை கண் வங்கியில், மரணத்தின் பின்னர் தனது கண்களை தானமாக வழங்க வந்திருந்தவர்களில் ஒருவரான, விஷ்வானி பசாதி என்ற மாணவி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
தான் பௌத்த மதத்தை சேர்ந்தவர் எனவும், தனது மதத்தில் தாம் இதனை உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.
 
webdunia

தனது புத்தமத நம்பிக்கை கண்தானம் செய்ய ஊக்குவிப்பதாகக் கூறுகிறார் விஷ்வானி பசாதி என்ற மாணவி
 
விஷ்வாணி போன்றவர்களின் கருவிழிப்படல தானத்தால் பயன்பெற்றவர்களில் ஒருவர் பரமன் மாஹாலிங்கம். விபத்து ஒன்றில் தனது வலது கண் பார்வையை இழந்த பரமன் மாஹாலிங்கம், இனி தனது வாழ்க்கையை ஒரு கண்ணுடனேயே கழிக்க வேண்டும் என தான் மனமுடைந்திருந்ததாகவும், ஆனால் தற்போது கொடையாளி ஒருவரின் கார்னியாவை கொண்டு தனக்கு மேற்கொள்ளப்பட்ட மாற்று அறுவை சிகிச்சையின் பின்னர், தனக்கு தற்போது அந்தக் கண் நன்றாக தெரிவதாகவும், மகிழ்ச்சியுடன் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது.
 
webdunia

1961ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இலங்கை கண்தானச் சங்கம் இலங்கையில் கண்தானத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது
 
தமது கருவிழிப் படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
 
கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.
 
சுற்றுச்சூழலிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.
 
மிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும்.
 
பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil