Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

HBD சமந்தா: ’மாஸ்கோவின் காவேரி’ முதல் ‘புஷ்பா’ பட பாடல் புகழ் வரை!!

HBD சமந்தா: ’மாஸ்கோவின் காவேரி’ முதல் ‘புஷ்பா’ பட பாடல் புகழ் வரை!!
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:31 IST)
இன்றைய தேதியில் ரசிகர்களுக்கு மிக பிடித்த தென்னிந்திய நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். கதாநாயகி, வில்லி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கும் சமந்தாவுக்கு 35ஆவது பிறந்தநாள்.
 
பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா கோலிவுட், பாலிவுட், ஓடிடி என அனைத்து தளங்களிலும் பயணித்து இப்போது ஹாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கிறார். அவர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சினிமாவுக்குள் நடிக்க வந்தது சுவாரஸ்ய கதை. ஆங்கிலோ- இந்தியன் கம்யூனிட்டியில் வளர்ந்த சமந்தா தனது சுற்றம் போலவே ஆஸ்திரேலியாவின் சிட்னி கல்லூரியில் படித்து அங்கேயே செட்டில் ஆக ஆசைப்பட்டார்.

அந்த ஆசையில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து வந்தவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அதில் சமந்தாவின் புகைப்படங்களை பார்த்த ஒருவர் மாடலிங்க்கு அழைக்க, மாடலிங்கில் சமந்தாவின் புகைப்படங்களை பார்த்த 'மாஸ்கோவின் காவேரி' பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். சினிமாவில் இந்த வருடத்தோடு தனது 12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்.
webdunia
புதிய விஷயங்களை கற்று கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் சமந்தா. தோட்டக்கலை, சமையல், யோகா, சிலம்பம் என புதுப்புது விஷயங்களை கற்று கொண்டுள்ளார்.
 
பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சி ஒன்றின் வரவேற்பில் பணி புரிந்ததற்காக சமந்தாவிற்கு ஐந்நூறு ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. அதுதான் அவரது முதல் சம்பளம்.
 
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்திற்கான டிரஸ்ட் மற்றும் 'சகி' என்ற பெண்களுக்கான பிரத்யேகமான ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் சமந்தா. விளம்பரம் மற்றும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கிடைக்கும் தொகையை தனது டிரஸ்ட் மற்றும் வியாபாரத்தில் முதலீடு செய்து விடுவேன் என பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் சமந்தா.
 
நடிகர்கள் தொகுப்பாளராக மாறுவது திரையுலகில் இருக்கக்கூடிய வழக்கம். இந்த வரிசையில் சமந்தாவும் இணைந்தார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வந்த நாகர்ஜூனா வெளிநாட்டில் படப்பிடிப்பு காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போக, சமந்தா வார இறுதியில் பிக்பாஸ் சிறப்பு தொகுப்பாளரானார். அடுத்து 'ஆஹா' ஓடிடியின் தெலுங்கு தளத்தில் 'சாம் ஜாம்' என்ற டாக் ஷோ மூலம் பல பிரபலங்களுடன் கலந்துரையாடினார் சாம்.
webdunia
நண்பர்கள் மத்தியில் சமந்தாவின் செல்ல பெயர் சாம். யசோதா என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். நாக சைதன்யாவுடனான மண விலக்குக்கு பிறகு 'மீண்டும் சென்னைக்கு வருகிறீர்களா?' என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிய போது, 'நான் ஏன் ஹைதராபாத்தை விட்டு வர வேண்டும்? இந்த நகரம் தான் எனக்கு அனைத்துமாக இருக்கிறது. இங்கே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன்' என பதிலளித்தார் சமந்தா.
 
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் சமந்தாவை கிட்டத்தட்ட 23 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் சமந்தாவும் ஒருவர். 'படங்களில் என்னுடைய கதாப்பாத்திரமாக மட்டும் தான் ரசிகர்களுக்கு அறிமுகமாவேன்.

ஆனால், நிஜத்தில் நான் எப்படி பட்டவள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொள்கிறேன். அவற்றை பயன்படுத்தவும் எனக்கு பிடித்திருக்கிறது' என்கிறார்.
 
டாட்டூ இனி எப்போதும் போட்டு கொள்ள கூடாது என்பது சமீபத்தில் தனக்கு தானே சமந்தா கொடுத்து கொண்ட அறிவுரை. பழைய நினைவுகளை தருவதில் அவை வலி மிகுந்தவை என அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.
webdunia
ஒரு நடிகையாக சவாலான கதாப்பாத்திரங்களை விரும்பி செய்வேன் என்பவர் தமிழில் இதுவரை நடித்த படங்களில் 'நீ தானே என் பொன்வசந்தம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'தெறி' ஆகிய படங்கள் மிக பிடித்தவை என கூறியிருக்கிறார்.
 
கடந்த 2017ம் ஆண்டு சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால், நான்கே ஆண்டுகளில் பிரிந்தது இந்த ஜோடி. விவாகரத்து தொடர்பான அறிவிப்பு இவர்களிடம் இருந்து வந்த போது ரசிகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலரையும் இது வருத்தமடைய செய்தது. விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய சமந்தா, 'இதற்கு பின்பு நான் மனதளவில் உடைந்து விடுவேன் என நினைத்தேன். இதனை நான் கடந்து வந்திருப்பதன் மூலம் எந்த அளவு வலிமை மிக்க பெண் என்பதை நான் உணர்ந்துள்ளேன்' என பேசினார்.
 
இந்த வருடம் 'புஷ்பா' படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் 'ஊ சொல்றியா' என ஒரு பாடலுக்கு ஆடினார் சமந்தா. இந்த பாடலில் சமந்தாவின் நடனத்திற்காகவே படம் பார்க்க வந்தோம் என பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருந்தனர். அந்த அளவிற்கு அந்த பாடல் படம் வெளியாவதற்கு முன்பு வெற்றி அடைந்தது. ஆனால், முதலில் இது போன்ற பாடலில் ஆடுவதற்கு சமந்தா மிகவும் தயங்கி இருக்கிறார். அதற்கு பிறகு அல்லு அர்ஜூன் கொடுத்த நம்பிக்கையின் பேரிலேயே சம்மதித்து இருக்கிறார். அல்லு அர்ஜூனுக்கு இதற்காக சமூக வலைதளங்களில் சமந்தா நன்றியும் தெரிவித்து இருந்தார்.
 
தமிழ், தெலுங்கு, ஓடிடி என தடம் பதித்தவர் அடுத்து ஹாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார். பிலிப் ஜான் இயக்கத்தில் 'தி அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார் சமந்தா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம்; தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு!