Publish Date: Thu, 04 May 2017 (18:34 IST)
Updated Date: Thu, 04 May 2017 (18:38 IST)
அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தான் உள்பட நான்கு ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்ட தருணத்தை எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள்.
புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது. பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.
`மிலிட்டரி ரிவ்யூ` என்ற சஞ்சிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிளேய்டன் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
''அமெரிக்க - ஆஃப்கன் இடையேயான நட்புறவிற்கு வலுசேர்க்கும் மற்றும் வடிவமைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தியது மட்டுமின்றி இந்த முயற்சியில் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.'' என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
காட்சித் தகவல் வல்லுநரான ஹில்டா கிளேய்டன், அமெரிக்க மாகாணமான ஜார்ஜியாவை சேர்ந்தவர்.ஹில்டா கிளேய்டனின் செயலை கெளரவிக்கும் விதமாக அவருக்கு புகைப்பட விருது ஒன்றை பாதுகாப்பு துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.