Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜக்கி வாசுதேவ் வருகையை எதிர்க்கும் ஓமன் மக்கள் – ட்விட்டரிலும் எதிர்வினை

ஜக்கி வாசுதேவ் வருகையை எதிர்க்கும் ஓமன் மக்கள் – ட்விட்டரிலும் எதிர்வினை
, சனி, 21 மே 2022 (14:04 IST)
இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டி, அவர் ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
'சத்குரு' என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளுக்கு 100 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். செளதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் உட்பட பல உலக நாடுகளுக்கு "மண் பாதுகாப்பு" என்ற சுற்றுச்சூழல் முன்னெடுப்பின் அங்கமாக மண் வளத்துக்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சேவ் சாயில் (Save Soil) இணையதளத்தின்படி, மஸ்கட்டில் ஓமன் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் நிகழ்ச்சியில் மே 25ஆம் தேதி, ஜக்கி வாசுதேவ் பங்கெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கு எதிர்வினையாக, "நோ வெல்கம் சத்குரு" என்ற ஹேஷ்டேக் ஓமன் நாட்டில் 19ஆம் தேதி டிரெண்டானது. 14,200 ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேக்குடன் பதிவிடப்பட்டன.
 
ஃபகத் நுமானி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் பயனர், "ஓமனில், மத சுதந்திரம் மற்றும் ஒவ்வொரு பிரிவையும் பின்பற்றுவர்களின் உரிமைகள், அந்த மதங்களைச் சேர்ந்த துறவிகள் மற்றும் ஆலயங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், அவர்களுடைய வழிபாடு மற்றும் பிரசங்கத்திற்கான மரியாதை வழங்கப்படுகிறது.
 
இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமுக்கும் விரோதமான பின்னணியைக் கொண்ட, சகிப்புத்தன்மை கொண்ட அதன் கொள்கைகளைக் கேலி செய்கின்ற, அவரை நாங்கள் வரவேற்கவில்லை," எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரைப் போலவே, கலீஃபா அல் அம்ரானி என்ற பயனர், "சத்குரு என்றழைக்கப்படுபவர், மண் பாதுகாப்பு என்ற பாசாங்குடன், தனது நாத்திக கருத்துகளைத் தீங்கிழைக்கும் வகையில், இஸ்லாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்வதற்கும் பரப்புவதற்கும் வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் பல்வேறு ட்விட்டர் பயனர்கள், இஸ்லாமியர்கள் இந்தியாவில் கொலை செய்யப்படுவதைக் குறிப்பிட்டு, சத்குரு அதற்கு ஆதரவளிப்பவர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
அலி அல் பத்மானி என்பவர், "இந்திய மண்ணை, அதில் சிந்தக்கூடிய இஸ்லாமிய மக்களின் ரத்தத்தில் இருந்து காப்பாற்றுவதில் ஏன் நீங்கள் தொடங்கக்கூடாது? நீங்கள் ஓமன் நாட்டில் வரவேற்கப்படவில்லை," என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதேபோன்று, தமீம் அல் சியாபி என்பவர், "இஸ்லாமியர்களின் அழிவுக்கு அழைப்பு விடும் இத்தகைய மனிதரின் வருகையை எப்படி ஏற்க முடிந்தது என்பதே எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. ஓமன் மண்ணில் நல்லவை மட்டுமே முளைவிடும்," என தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
ஜக்கி வாசுதேவ் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, "பிரிட்டிஷ் மற்றும் இஸ்லாமிய படையெடுப்புகள் இந்தியாவிற்குப் பல கொடுமைகளைச் செய்துள்ளன. நாம் அதை மறந்துவிடக் கூடாது. அது நமக்கு மீண்டும் நடந்துவிடக்கூடாது," என்று கூறினார். அந்த காணொளி சமீபத்தில் இணையத்தில் மீண்டும் ஷேர் செய்யப்பட்டது.
 
மேலும், அதே காணொளியில் அவர், "அவற்றையெல்லாம் நமக்குள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் கசப்போடும் இருக்கக்கூடாது. அத்தகைய கசப்பு அவர்களை அழித்துவிடும்," என்றும் கூறியுள்ளார். ஒருபுறம் சத்குருவின் வருகையைப் பலர் எதிர்த்துக் கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் இந்த எதிர்ப்பை சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
 
அல்மா என்பவரின் ட்விட்டர் பதிவில், "மண் தொடர்பான விஷயங்களுக்காக வரும் இந்த மனிதர் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். மேலும், அவர் சில மத பிரச்னைகளைப் பற்றிப் பேசினால், அதைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரிகள் அங்கு இருப்பார்கள். ஆகவே, இந்த விஷயத்தைக் கையாள்வதில் இத்தகைய காட்டுமிராண்டித்தனம் தேவையில்லை. இது எதிர்மறையான தோற்றத்தைப் பிரதிபலிக்கிறது," என்று விமர்சித்துள்ளார்.
 
ஜக்கி வாசுதேவ் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்திற்கு ஆதரவானவராக அறியப்பட்ட யோகா ஆசிரியர். அவர், தான் எந்த மதத்துடனும் தொடர்புடையவர் இல்லை என்று முன்னர் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் BA.4 கொரோனா: தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி