Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்

அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்
, சனி, 16 ஜனவரி 2021 (14:06 IST)
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 
இந்த போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் 655 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதையடுத்து உரையாற்றிய தமிழக முதல்வர் பழனிசாமி, "உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனும் பாராட்டு பெற்ற மண், இந்த அலங்காநல்லூர் கிராமத்து மண். பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து பாதுகாத்தது அதிமுக அரசு தான். வீரம் நிறைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளை வளர்ப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், "உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. காளைகளை வீரர்கள் அடக்கும் காட்சியை உலக மக்களே கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.
 
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக அதிகமாடுகளை பிடிக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் பரிசாக கார் ஒன்றும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் சார்பில் கார் ஒன்றும் என மொத்தம் இரண்டு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
மேலும், தங்ககாசு, தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், மிக்சி, இருசக்கர வாகனம், மிதிவண்டி, கட்டில், மெத்தை, ஆடைகள் போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
 
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருகை தர உள்ளதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மருத்துவ பரிசோதனைக்களுக்காகவும், காயங்கள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து செல்லவும்108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
முன்னதாக, முதல் சுற்றுக்கான மாடுபிடி வீரர்கள் போட்டி துவங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பாகவே களத்திற்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து பூஜைக்காக கோவில் காளைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு சற்று நேரம் முன்பு, வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் காளை உரிமையாளர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அழைத்துச்சென்ற ரெட் கிராஸ் அமைப்பினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படுமா?