Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுய இன்ப பழக்கம்: கொரோனா வைரஸிலிருந்து காக்குமா? - விரிவான தகவல்கள்

சுய இன்ப பழக்கம்: கொரோனா வைரஸிலிருந்து காக்குமா? - விரிவான தகவல்கள்
, செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (09:22 IST)
வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர்.

அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது.
விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல ‘அற்புத சுகமளிக்கும்’ மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்டிக் பாம்பு எண்ணெய், டாக்டர் பெல்ஸ் பைன் டார் தேன், ஷென்க்ஸ் மாண்ட்ரேக் மாத்திரைகள், டாக்டர் ஜோன்ஸ் தைலம், ஹில்ஸ் கஸ்கரா குனைன் புரோமைட், வுல்ஃபிங் அன் கோ நிறுவனத்தின் புகழ்பெற்ற கரகரப்பான புதினா மாத்திரைகள் ஆகியவை அவற்றில் சில. செய்தித்தாள்களில் இவற்றின் விளம்பரங்கள் தொடர்ந்து வெளியாயின. அதிர்ச்சியூட்டும் நோய்த் தொற்று செய்திகளுக்குப் பக்கத்திலேயே இவை வெளியாயின.

2020க்கு வருவோம். இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்சா தொற்றுக்கும், கோவிட்-19 தொற்றுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டுகால அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் இன்றும் கேள்விக்குரிய பல மருந்துக் கலவைகள், நாட்டு மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. அதுவும், இவையெல்லாம் நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிக்கும் என்ற செய்தியோடு இவை வலம் வருகின்றன.
webdunia

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுவரும் இது தொடர்பான பல புரளிகளிலேயே, நிறைய சுய இன்பம் செய்துகொள்வதால் வெள்ளை ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பரப்பப்படும் ஒரு புரளி மிகவும் விநோதமானது. வழக்கம்போலவே, ஊட்டச்சத்து அறிவுரைகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமுள்ள உணவு வகைகளை அதிகம் உண்ணும்படி இந்த அறிவுரைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.

1918ம் ஆண்டு அதிகம் வெங்காயம் சாப்பிடும்படி பல அறிவுரைகள் பரவின. இப்போது, பல போலி அறிவியலாளர்கள் கொம்புச்சா போன்ற நவநாகரிக உணவு வகை, புரோபயோட்டிக் போன்றவற்றை உட்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.

சிவப்பு மிளகாயும், கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேனீரும் கொரோனா வராமல் தடுக்க முகக் கவசத்தைவிட அதிகமாக உதவும் என்று அப்படி ஒரு ஆலோசனை பகிரப்படுகிறது. இது மிக மோசடியான, அடாவடியான அறிவுரை. ஏனெனில் சிலவகை முகக்கவசங்களை அணிவதால் சுவாசப்பாதையில் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு ஐந்தில் ஒருமடங்கு குறையும்.

மாத்திரைகள், நாகரிக அதிசக்தி உணவுகள், உடல் நலப் பழக்கங்கள் ஆகியவற்றின் உதவியோடு குறுக்கு வழியில் நலமிக்க நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கிவிடமுடியும் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை. உண்மையில் நமது நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்துக்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.

“நோயெதிர்ப்பு சக்தி என்பது வெவ்வேறு உட்கூறுகளை உடையது” என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் வல்லுநர் அகிகோ இவாசகி. “நம் உடலில் தோல், காற்றோட்டப் பாதைகள், சளிம சவ்வுகள் ஆகியவை தொற்றுக்கு எதிர்ப்பரணாக அமைந்துள்ளன. இந்த அரண்களைக் கடந்து வைரஸ் உள்ளே புகுந்துவிட்டால் உடலின் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு எதிர்வினை தூண்டப்படும்” என்கிறார் அவர். இந்த உள்ளார்ந்த எதிர்வினை என்பது வேதிப்பொருள்கள், உயிரணுக்கள் ஆகியவை எச்சரிக்கை எழுப்பி, உள்ளே புகுந்த எதிரியான வைரசை எதிர்த்துப் போரிட்டு அழிக்கத் தொடங்கும்.

“அது போதுமானதாக இல்லாதபோது, தகவமைப்பு எதிர்ப்பாற்றல் என்ற ஒன்றை நம் உடல் தூண்டிவிடும்” என்கிறார் அவர். இந்த தகவமைப்பு எதிர்ப்பாற்றல் என்பது புரதங்கள், உயிரணுக்களை உள்ளடக்கிய, ஆன்டிபாடிஸ் எனப்படும் எதிர்ப்பான்களை உள்ளடக்கிய எதிர்வினை. இந்த எதிர்வினை உருவாக சில நாள்கள் முதல் வாரங்கள் வகை ஆகலாம். இப்படி உருவாகும் தகவமைப்பு நோயெதிர்ப்பு குறிப்பிட்ட வகை நோய் நுண்மியை மட்டுமே குறிவைத்து தாக்கும். “எடுத்துக்காட்டாக, கோவிட்-19 நோயை எதிர்க்கும் குறிப்பான T செல்கள் இன்ஃபுளுயன்சா அல்லது பேக்டீரியா வகை நோய் நுண்மிகளைத் தாக்காது” என்கிறார் அவர்.

பெரும்பாலான நோய்த் தொற்றுகள் கடைசியில் தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும். ஆனால் இதனை செயல்படுத்த மற்றொரு வழி உள்ளது. அதுதான் தடுப்பு மருந்து. உயிருள்ள அல்லது செத்த நுண்ணியிரிகளை முழுதாகவோ, பகுதிகளையோ உடலுக்குள் நோய் வருவதற்கு முன்பாகவே அறிமுகப்படுத்துவதன் மூலம் உண்மையான நோய் நுண்மிகள், கிருமிகள் உடலுக்குள் வரும்போது அவற்றை அடையாளம் கண்டுகொள்ள உடலுக்கு உதவும் முறைதான் தடுப்பு மருந்து முறை.
ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பை ஊக்குவிப்பது என்ற கருத்து, இதுபோன்ற எதிர்வினைகளை ஊக்கம் மிக்கதாக, வலுவானதாக ஆக்குவதாகவே இருக்க வாய்ப்புள்ளது. உண்மையில், நீங்கள் இதைச் செய்ய விரும்பமாட்டீர்கள்.

ஜலதோஷம், உடல் வலி, காய்ச்சல், மூளைத் தளர்ச்சி, ஏராளமான சளி, மூக்கொழுகல் ஆகிய அறிகுறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் உண்மையில் வைரஸ் அல்லது பிற நோய் நுண்மிகள் நேரடியாக உருவாக்கியவை அல்ல. ஒரு காரணத்துக்காக நமது உடல் அமைப்பால் தூண்டப்பட்டவையே இவை. இவையெல்லாம் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு ஆற்றலின் எதிர்வினையால் உருவானவை.

எடுத்துக்காட்டாக சளியைப் பொறுத்தவரை, அது நோய் நுண்மிகளை வெளியே தள்ள உதவுகிறது. காய்ச்சலைப் பொருத்தவரை, நுண்மிகள் பல்கிப் பெருகுவது கடினமாகும் அளவுக்கு உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. நம் நோயெதிர்ப்பு அணுக்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதற்காக அழற்சி ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் நம் உடலின் ரத்தச் சிறையின் வழியாகப் பயணிக்கும். அந்த வேதிப் பயணத்தின் பக்க விளைவே வலிகளும், பொதுவான அசௌகரியங்களும். ஓய்வெடுத்து, உடல் குணமடைய அனுமதிக்கும்படி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பவும் இந்த அறிகுறிகள் உதவுகின்றன.

இந்த சளிம, வேதி சமிக்ஞைகள் ஆகியவை அழற்சியின் ஒரு பகுதியே. அதுமட்டுமல்ல, நோய் எதிர்ப்பாற்றல் வினையின் அடித்தளமும் இவையே. ஆனால், இந்த செயல்முறை களைப்பை ஏற்படுத்துவது. எனவே, இந்த செயல்முறைய எல்லா நேரங்களிலும் தூண்டுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது எப்படி இருந்தாலும், கோவிட்-19 உள்ளிட்ட பெரும்பாலான வைரஸ்கள் இந்த செயல்முறையை தூண்டவே செய்யும்.

கொம்பூச்சா, பச்சை தேனீர் அல்லது நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்று கூறப்படும் வேறு கலவை எதுவானாலும் அவற்றால் உண்மையில் தாக்கம் ஏதாவது இருக்குமானால், அதை உட்கொள்கிறவர்கள் சுகம் பெற்று மிளிரமாட்டார்கள். அதற்குப் பதிலாக மூக்கு ஒழுகிக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஏனெனில் நோயெதிர்ப்பு அதிகமானால், அழற்சி வினை அதிகரிக்கவே செய்யும். ஆனால் நகைமுரண் என்னவென்றால், நோயெதிர்ப்பு ஆற்றலை இன்னின்ன

பொருள்கள் ஊக்குவிக்கும் என்று கூறுகிறவர்கள் அவற்றால் அழற்சி குறையும் என்றே கூறுகிறார்கள். நோயெதிர்ப்பின் மற்றொரு கூறாகிய, தகவமைப்பு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமானால்கூட அதீத அசௌகரியமே ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஆர்வம் மிகுந்த நோயெதிர்ப்பு அணுக்கள், தீங்கிழைக்காத மகரந்தம் போன்ற துகள்களை, தீங்கு விளைவிப்பவை போல நடத்துமானால் அதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை அவை பாதிக்கும் பொருள்களை எதிர்கொள்ளும்போதும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு வினைகளையும் தூண்டிவிடுகின்றன.

இதனால் ஏராளமான தும்மல், கண்ணரிப்பு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த ‘நோயெதிர்ப்பை ஊக்குவிக்கும்’ மருந்துகளை பரிந்துரை செய்கிறவர்கள், சளியும், தும்மலும், ஒவ்வாமையும் அதிகரிக்கவேண்டும் என்று நினைத்து அவற்றைப் பரிந்துரைப்பதில்லை. சரி. நோயெதிர்ப்பு ஊக்குவிக்கும் பொருள்களை பரிந்துரை செய்வோருக்கு சந்தேகத்தின் பலனை அளிப்போம். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், கலவைகள் உண்மையில் நோயெதிர்ப்பை ஊக்குவிக்காவிட்டாலும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்புக்கு உதவி ஏதும் செய்யும் என்று கூறமுடியுமா? ஆனால், பெரும்பாலான இத்தகைய கூற்றுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதுதான் பிரச்சனை

சில தடைகள் இருந்தாலொழிய, வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான மக்களுக்குத் தேவையான அளவு விட்டமின்கள் அவர்கள் உணவில் இருந்தே கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாவர உணவு சாப்பிடுகிறவர்களுக்கு சில வகை விட்டமின் குறைபாடுகள் ஏற்படலாம். ஆனால், விட்டமின் டி மட்டும் விதிவிலக்கு. இந்த டி விட்டமினை தனியாக உட்கொள்வது தவறில்லை என்கிறார் இவாசகி.

டி விட்டமின் குறைபாட்டையும், சுவாசத் தொற்றுகள் ஏற்படுவதற்கான அதிக இடர்பாட்டையும் இணைத்துக்காட்டும் பல ஆய்வுகள் வந்துவிட்டன. சுவாசத் தொற்றுகள் ஏற்படும்போது, விட்டமின் டி பற்றாக்குறையால் அது தீவிரம் அடைவதையும் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. தண்டு மரப்பு நோய் (multiple sclerosis) போன்ற பல வகை தன் தடுப்பாற்று நோய்களுக்கும் (autoimmune diseases) விட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

உண்மையில், பல நோயெதிர்ப்பு அணுக்களால் டி விட்டமினை சரியாக அடையாளம் காண முடியும். உள்ளார்ந்த மற்றும் பெற்ற நோய்த்தடுப்பு வினைகளில் விட்டமின் டி முக்கியப் பங்காற்றுவதாகக் கருதப்படுகிறது. ஆனால், எந்த அளவு பங்காற்றுகிறது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது என்றபோதும்.

ஆனால், பல நாடுகளில், டி விட்டமின் பற்றாக்குறை இருக்கிறது. இவற்றில் வசதியான நாடுகள் பலவும் இருக்கின்றன. 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதிலும் 100 கோடி பேருக்கு டி விட்டமின் பற்றாக்குறை இருந்தது. இப்போது பொதுமுடக்கம் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உடலில் சூரிய ஒளி படும் வாய்ப்பு குறைந்து, அதனால், விட்டமின் டி பற்றாக்குறையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சுய இன்பத்தால் பயனுண்டா?

வரலாற்றில் நீண்ட காலம் முன்பிருந்தே சுய இன்பம் என்ற பாலியல் நடவடிக்கை மீது மேற்கத்திய மருத்துவத்துக்கு பல சந்தேகங்கள் இருந்துவந்தன. ஒரு அவுன்ஸ் (28 மிலி) விந்து இழப்பு, 40 அவுன்ஸ் (1.18 லிட்டர்) ரத்தப் போக்கினால் ஏற்படும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று 18ம் நூற்றாண்டு மருத்துவர் ஒருவர் கூறினார். அதன் பிறகு, நரம்புத் தளர்ச்சியில் இருந்து பார்வையிழப்பு வரை பலவகை நோய்களுக்கும் சுய இன்பம் காரணமாக காட்டப்படுவது பல நூற்றாண்டுகளாக நடந்தது.

நோயெதிர்ப்பு சக்தி ஊக்கம் பெறுவது என ஏதுமில்லை

இப்போது காட்சி மாறிவிட்டது. சுய இன்பத்தால், ஆச்சரியமளிக்கும் வகையில் உடல் நலனுக்கு பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஆண்களுக்கு விந்துகளின் ஆரோக்கியத்துக்கு இது உதவுவதாக கூறப்படுகிறது. அத்துடன் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் சுய இன்பம் செய்வதால் குறைகிறது என்றும் கருதப்படுகிறது.

ஆனால், சுய இன்பம் செய்வதால் நோயெதிர்ப்பு ஆற்றல் கூடுவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்டது. பாலியல் தூண்டலுக்கு உள்ளாகும்போதும், பாலுறவு உச்ச நிலையிலும் ஆண்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது உண்மை. ஆனால், இது நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பளிக்கும் என்று கூறுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
webdunia

கொரோனா வைரசிடம் இருந்து இது ஒருவகையில் உங்களைப் பாதுகாக்கும். ஏனெனில் சுய இன்பம் செய்வதன் மூலம் பாலுறவில் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருக்கிறீர்கள். நியூயார்க் மாநகர சுகாதாரம் மற்றும் மன நலத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தது. கோவிட்-19 யுகத்தில் ‘நீங்களே உங்கள் பாதுகாப்பான பாலியல் கூட்டாளி’ என்கிறது அந்தப் பதிவு.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை! – கொரோனாவின் பிடியில் இந்தியா!