Publish Date: Tue, 05 Apr 2022 (14:04 IST)
Updated Date: Tue, 05 Apr 2022 (14:21 IST)
இந்தியாவில் இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் நரேந்திர மோதியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளதாக செய்தி.
இது குறித்து அந்த செய்தியில், ''நல்லாட்சியை வழங்க, நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் மோதி, பிராந்திய வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவருமே செயலர் நிலையில் உள்ளவர்கள். பிரதமர் மோதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் மோதி, "பற்றாக்குறைகளை சமாளிக்க திட்டம் போடுவதை விடுத்து அதிகப்படியானவற்றை நிர்வகிக்க திட்டம் தீட்டுங்கள். வறுமையைக் காரணம் காட்டும் பழைய சாக்குகளை விட்டொழியுங்கள். பெரிய இலக்குகளைக் கொள்ளுங்கள்" என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
அதிகாரிகள் அளித்த விளக்கம்:
அப்போது அதிகாரிகள் சிலர், "இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் மாநிலங்கள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என்று எடுத்துரைத்தனர். அண்மையில், தேர்தலை சந்தித்த பஞ்சாப், உ.பி., கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை முன்வைத்து அதிகாரிகள் இந்த ஆலோசனையை பிரதமருக்கு வழங்கினர்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.