Publish Date: Sat, 22 Feb 2020 (13:03 IST)
Updated Date: Sat, 22 Feb 2020 (13:04 IST)
சீனாவுடன் எந்த தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
"இரானில் பல நகரங்களில்" ஏற்கனவே வைரஸ் தொற்று பாதிப்பு பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவரை இரானில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ், சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம்தான் கவலையளிக்கிறது என்றார்.
"கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவருன் நேரடி தொடர்பு இல்லை. சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சில நாடுகளுக்கு இத்தொற்று பரவுகிறது என்பது புரியவில்லை. முக்கியமாக இரானில் தற்போது அதிகமாகும் உயிரிழப்புகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது," என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.