Publish Date: Sun, 09 Jun 2019 (18:15 IST)
Updated Date: Sun, 09 Jun 2019 (18:17 IST)
மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகின் நிதி செயல்பாட்டு அமைப்பு முறைக்கு கணிசமான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
பெரும் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தும் வல்லமை மிகுந்த சில நிறுவனங்கள், ஒட்டுமொத்த நிதி உலகின் பரிமாற்றங்களை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை ஏற்படக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே கூறுகிறார்.
ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சார்ந்த சந்தையில் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தில் வரிவிதிப்பதை மட்டும் தவிர்த்து, அந்த குறிப்பிட்ட நிறுவனம் எங்கெல்லாம் வருவாய் ஈட்டுகிறதோ அங்கெல்லாம் வரி விதிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.