Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"போருக்கு தயாராகுங்கள், விசுவாசமாக இருங்கள்" - ராணுவத்தினருக்கு உத்தரவிட்ட சீன அதிபர்

, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (09:44 IST)
"போருக்கு தயாராகுங்கள், விசுவாசமாக இருங்கள்" - இதுதான் இரு தினங்களுக்கு முன்பு தமது நாட்டு ராணுவத்தினருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறப்பித்த கட்டளை. இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா உறுதிப்படுத்தியிருக்கிறது.

சாஜோ நகரில் ராணுவ கடல் பிரிவு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட ஷி ஜின்பிங், எல்லையில் மிகவும் விழிப்புணர்வுடன் இருங்கள். முழு விசுவாசம், அர்ப்பணிப்பு, நம்பிக்கையுடன் இருங்கள். அவைதான் நாட்டுக்கு தேவை என்று வீரர்களிடையே உரையாற்றியிருக்கிறார்.
 
அதிபரின் திடீர் அழைப்பு ஏன்?
 
அண்டை நாடுகளுடான இணக்கமற்ற உறவை சீனா பேணுவதற்கு ராஜீய காரணங்களும் கேந்திர முக்கியத்துவமான காரணங்களும் ஏராளமாக உள்ளன. இந்தியாவுடன் லடாக் எல்லை பிரச்னை, தென் சீன கடல் பிராந்தியத்தில் தைவான், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளுடன் பிரச்னை, திபெத்தில் பிரச்சனை என சீனாவின் ஆளுகை விரிவாக்கத்தின் முயற்சிகளுக்கு எந்தெந்த நாடுகள் எல்லாம் எதிர்ப்பாக உள்ளனவோ அங்கெல்லாம் எல்லையிலும் கடல் பகுதியிலும்  தமது படைத்துருப்புகளை சீனா குவிக்கத் தயக்கம் காட்டியது கிடையாது.
 
இந்த நிலையில், சீன அதிபரின் அழைப்பு, இந்தியாவை மையப்படுத்தியா அல்லது அமெரிக்கா அல்லது ஜப்பானுடனா என்பது தெளிவற்று உள்ளது. தைவான்  விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்க மறுத்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு சீனாவே முக்கிய காரணம் என டிரம்ப்  குற்றஞ்சாட்டுவது ஆகிய அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டி வருகின்றன.
 
இந்த நிலையில், தைவானின் பிராந்திய பாதுகாப்புக்காக்க அதிநவீனத்துவம் வாய்ந்த ஆயுத தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதிக தூரம் சென்று தாக்கும் ராக்கெட் ஏவும் அமைப்பு அதில் அடங்கியிருப்பதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.
 
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீனா, அதன் வெளியுறவுத்துறை மூலம் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறது. தைவான் உடனான இந்த ராணுவ தளவாட  விற்பனையை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. தைவான் ராணுவத்துடனான எல்லாவித ராணுவ உறவுகளையும் அமெரிக்கா உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
 
தங்களுடைய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தைவான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதனால், இந்த விவகாரத்தில் சீனாவின் மிரட்டலை தைவானோ, அமெரிக்காவோ பெரிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தப்பின்னணியில், கடந்த செப்டம்பர் 18,19 ஆகிய  தேதிகளுக்கு பிந்தைய நாட்களில் தைவான் மற்றும் சீனாவை இணைக்கும் நிலப்பகுியில் சீன படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இது அந்த  தீவின் அதிபர் ட்ஸாய் இங் வென்னின் ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவும் பார்க்கப்படுகிறது.
 
லடாக் பிராந்திய எல்லை பதற்றம் தொடருகிறதா?
 
இதேவேளை, லடாக் பிராந்தியத்தில் இரு தரப்பு ராணுவ கட்டளை அதிகாரிகளுடன் ஆன பேச்சுவார்த்தைக்குப் பிறகு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதற்றம்  குறைந்திருப்பதாக தோற்றம் நிலவினாலும், சீன படையினர் முகாமிட்டுள்ள இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் மேலதிக படையினரை சீனா குவித்து  வருவதை பாதுகாப்பு ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
 
முன்பு அருணாசல பிரதேசத்தை தங்களுடைய பிராந்தியமாக கூறி வந்த சீனாவுக்கு இந்தியா எதிர்வினையாற்றத்தொடங்கிய வேளையில், லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
 
கடந்த புதன்கிழமை மீண்டும் லடாக் விவகாரத்தை எழுப்பிய சீனா, லடாக்கில் இந்தியா சட்டவிரோதமாக எழுப்பிய அமைப்புகளை தங்கள் நாடு அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தது.
 
இத்தகைய எதிர்வினை, இந்தியாவுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பார்க்கவில்லையா என இந்திய வெளியுறவுத்துறையிடம் கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, லடாக் விவகாரத்திலும் சரி, காஷ்மீர் விவகாரத்திலும் சரி, சீனா  தலையிட தார்மீக உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.
 
லடாக், காஷ்மீர் மட்டுமின்றி அருணாசல பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இதை பல தருணங்களில் சீனாவிடம் இந்தியா தெளிவுபடுத்தியிருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதிலுமே தற்போது இந்திய அரசு முழு  கவனம் செலுத்தி வருவதாக அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
 
ராஜ்நாத் சிங் வருகைக்கு பிறகு எதிர்வினை
 
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் எல்லை பகுதியில் 44 புதிய மேம்பாலங்களை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். அதன் பிறகே, எல்லைப்புறங்களில் தமது படையினரின் எண்ணிக்கையை சீனா அதிகரிக்கத் தொடங்கியது.
 
இந்தியாவில் எல்லை புறங்களில் கட்டப்பட்ட 44 புதிய பாலங்கள் அனைத்தும் இந்திய தளவாடங்கள் விரைவாகவும் தடையின்றியும் வந்து செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன. தளவாடங்களின் போக்குவரத்தை அவை எளிதாக்கும் என்பதால், படைகளை குவிக்கவும், பதற்றம் நிறைந்த காலத்தில் விரைவாக எதிரியால் இலக்கு வைக்கப்படும் இடங்களை சென்றடையவும் இந்த பாலங்கள் உதவியாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை நம்புகிறது.
 
இந்த பாலங்கள் திறப்பு குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமையன்று பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், இந்தியாவின் இதுபோன்ற செயல்பாடுகள்தான் இரு தரப்பு பதற்றம் தீவிரம் அடைய மூல காரணம் என்று கூறினார்.
 
முதலும் முடிவுமாக நாங்கள் அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கவில்லை. இரண்டாவது அங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு  உள்கட்டமைப்பு மற்றும் எல்லையில் நிறுவப்படும் ராணுவ வசதிகளை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று ட்செள லிஜியாங் கூறினார்.
 
இந்தப் பின்னணியில் சீனா குவித்து வரும் படைக்கு ஈடாக, தமது படை தளவாடங்களின் இருப்பை அதிகரிக்க இந்தியா தமது தளவாட வசதிகளை பெருக்கி வருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 
இவை, எப்போது பிரச்சனை வந்தாலும் மீண்டும் லடாக் எல்லை பதற்றம் போன்ற நிலைமை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்ற முனைப்புடன் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதையே காட்டுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் Great Indian Festival Sale - இன்று முதல் அமர்களமாய்!!