Publish Date: Fri, 15 Jan 2021 (14:22 IST)
Updated Date: Fri, 15 Jan 2021 (16:09 IST)
இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
வெள்ளிக்கிழமை இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வதற்கு சற்று முன்பு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மோசமான, நாசகர நிலநடுக்கங்களும், சுனாமியும் பல முறை தாக்கிய நாடு இந்தோனீசியா. 2018ம் ஆண்டு சுலவேசி தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
மமுஜு நகரத்தில் மித்ர மனகர்ரா மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
சுனாமி வாய்ப்பு உண்டா?
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஆனால், இரண்டு முதன்மை நில நடுக்கங்கள் நடந்துள்ள நிலையில் நிலடுக்கத்துக்குப் பிந்திய வலுவான அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நிலையில் சுனாமி ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்து வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.