Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள்

பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள்
, திங்கள், 17 அக்டோபர் 2022 (13:36 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரில் உள்ள பிரபலமான நிஷ்தர் மருத்துவமனையின் மேல் கூரையில் சடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பஞ்சாப் மாநில அரசின் முதற்கட்ட விசாரணையில், இவை அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்கள் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் பல சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

இந்த படங்களும் வீடியோக்களும் வெளியான பிறகு, இவை யாருடைய சடலங்கள், ஏன் இந்த சடலங்களுக்கு உரிமை கோரப்படாமல் தூக்கி எறியப்பட்டன என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்தன.

இந்த விவாதம் பல சந்தேகங்களை எழுப்பின. அதன் பிறகு பஞ்சாப் அரசு வியாழன் இரவே விசாரணையை அறிவித்தது. இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நிஷ்தர் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டப்பட்டது.

பஞ்சாப் அரசு சார்பாக, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை மூன்று நாட்களில் சமர்ப்பிக்குமாறு நிஷ்தர் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையின்போது கல்வி ஆராய்ச்சி நோக்கத்திற்காக மருத்துவ மாணவர்களுக்கு உள்ளூர் காவல்துறையினர் நிஷ்தர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் சடலங்களை ஒப்படைத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

'கல்வி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சடலங்கள்'

இந்த விசாரணை முடிவதற்கு முன்பே, வெள்ளிக்கிழமையன்று பஞ்சாப் முதல்வர் பர்வேஸ் இலாஹியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மூனிஸ் இலாஹி சார்பில், நிஷ்தர் மருத்துவக் கல்லூரி அளித்த முதற்கட்ட பதில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

மூனிஸ் இலாஹியின் கூற்றுப்படி, நிஷ்தர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறைத் தலைவர் தனது பதிலில், இந்த உடல்கள் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்கள் என்றும், அவர்களின் உடற்கூறாய்வை நடத்துவதற்காக நிஷ்தர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு காவல்துறையினரால் கொடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உடற்கூறியல் என்பது மருத்துவக் கல்லூரிகளில் முதல் இரண்டு ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் உடல் உறுப்புகளைப் பற்றிய பாடமாகும்.

அதேசமயம், உடற்கூறாய்வு என்பது, இறந்தவரின் உடலைப் பரிசோதித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றைப் பரிசோதிக்கப்படும் முறையும் ஆகும்.

இந்த விளக்கத்தில், "இறந்த உடல்களை காவல்துறை ஒப்படைத்த பிறகு, தேவைப்பட்டால், எம்.பி.பி.எஸ் மாணவர்களின் கல்வி நோக்கத்திற்காக அவற்றைப் பயன்படுத்தலாம்," என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

"உடல்கள் அழுகியும், துர்நாற்றமும் வீசியதால், அவற்றை குளிர்பதன பெட்டியில் வைக்க முடியவில்லை. கல்வி நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது," என்று மருத்துவமனை கூறியுள்ளது.

"அத்தகைய சடலங்களின் 'சிதைவு செயல்முறை' முடிந்ததும், அவற்றின் உடலில் இருந்து எலும்புகள் பிரிக்கப்படுகின்றன. அவை கல்வி ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சடலங்கள் புதைக்கப்படுகின்றன. ஆனால், இது சடலங்களை அவமதிக்கும் செயல் இல்லை," என்று நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறைத் தலைவர் கூறியுள்ளார்.

நிஷ்தர் மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைத் தலைவரான பேராசிரியர் மரியம் அஷ்ரப்பை பிபிசி தொடர்பு கொண்டபோது, ​​இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்த போவதாகவும், அதில் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

கல்வி நோக்கத்திற்காக மனித சடலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

எந்த நோக்கத்திற்காக ஒருவரது சடலத்தை இப்படி குவிக்கப்படுகின்றன என்றும், மருத்துவமனைகளில் பிணவறைகள் எதற்காக உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண, ஷேக் ஜைத் மருத்துவமனையின் உடற்கூறியல் துறைத் தலைவரான ரஹிம்யார் கானிடம் பேசினோம்.

இதுகுறித்து பிபிசியிடம் அவர் பேசுகையில், "மருத்துவப் பாடங்களும் கற்பிக்கப்படும் மருத்துவமனையில் பொதுவாக இரண்டு வகையான பிணவறைகள் இருக்கும். ஒன்று உடற்கூறியல் துறைக்கான பிணவறை, மற்றொன்று உடற்கூறாய்வு செய்யப்படும் தடயவியல் துறைக்கானது," என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ​​"காவல்துறை உடற்கூறாய்வுக்கு கொண்டு வரும் போது, ​​அடையாளம் தெரியாத சடலத்தை, உடற்கூறாய்வுக்கு பின், அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையில், பிணவறைகளில் வைப்பது வழக்கம்."

இறந்தவரின் குடும்பத்தை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் வெற்றி பெற்றால், இறந்தவர்களின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் அடையாளம் தெரியாத அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்படாத இறந்த உடல்கள், பிணவறையில் வைக்கப்படுகின்றன," என்கிறார்.

"சட்டப்படி, அத்தகைய உடல்களை அடையாளம் காண இரண்டு வாரங்கள் காத்திருப்பு காலம் இருக்கும். இதன்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொள்ள காவல்துறை முயற்சி செய்யும்.

இந்த காத்திருப்பு காலத்திற்கு பிறகு, அந்த சடலங்களை கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக இதுபோன்ற அடையாளம் காண முடியாத சடலங்கள் நான்கு வாரங்களுக்கு வைக்கப்படுகின்றன. இதன் போது சடலத்தை சிதைவடையாமல் வைத்திருக்க ரசாயன செயல்முறை செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன," என்கிறார் ரஹிம்யார் கான்.

இவ்வாறு சடலங்களை கொடுப்பதற்கென்றே தனி வழிமுறை உள்ளது. அதில் யார் அந்த சடலத்தை நம்மிடம் ஒப்படைத்தார்கள் என்று எழுதி, அதனுடன் இறந்த உடலின் மற்ற தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்கிறார்.

"குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு உடலை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்போம். இதனால் இந்த சமயத்தில் யாராவது அடையாளம் காணப்பட்டால், அதை காவல்துறையின் உதவியுடன் அவர்களின் குடும்பங்களுக்கு திருப்பி அனுப்ப முடியும்," என்கிறார் ரஹிம்யார் கான்.

இந்த சமயத்தில்கூட சடலத்தை அடையாளம் காண முடியாவிட்டால், அதை உடற்கூறியல் துறை கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது. அதில் உடல் உறுப்புகள் பிரிக்கப்படுகின்றன. உடலின் உள்ளுறுப்புகளைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது… பாசிட்டிவ் வைப்-புடன் ஓபிஎஸ்!