Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தடுப்பு மருந்து: அமெரிக்காவில் அவசர அனுமதிக்கு பிஃபிசர் விண்ணப்பம்

கொரோனா தடுப்பு மருந்து: அமெரிக்காவில் அவசர அனுமதிக்கு பிஃபிசர் விண்ணப்பம்
, சனி, 21 நவம்பர் 2020 (15:37 IST)
அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன.

இந்த மருந்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பாதுகாப்பானது தானா என்பதை தீர்மானிப்பது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (எஃப்.டி.ஏ) என்ற அமைப்பின் பணி.

இந்த எஃப்.டி.ஏ அமைப்பு, இந்த மருந்தைக் குறித்து முழுமையாக படிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை, அமெரிக்க அரசு, வரும் டிசம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அனுமதிக்கலாம்.

இந்த மருந்தின் மேம்பட்ட சோதனையில் இருந்து கிடைத்த தரவுகள், இந்த மருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட 94% பேரைப் பாதுகாக்கிறது எனக் காட்டுகின்றன.

பிரிட்டன், ஏற்கனவே இந்த மருந்தை 40 மில்லியன் டோஸ் முன் கூட்டி ஆர்டர் செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் மருந்து வந்து சேரும்.

அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவையை, கடந்த வியாழக்கிழமை, கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையே வெளிப்படுத்துகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, ஒரே நாளில் 2,000 பேருக்கு மேல் இறந்து இருக்கிறார்கள்.

எப்போது கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்?
அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதி அடுத்த மாதம் முதல் பாதியில் வந்தால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராக இருக்கும் என, ப்ஃபிசர் நிறுவனத் தரப்பே சொல்லி இருக்கிறது.

ஜெனடிக் கோட் விவரிக்கப்பட்ட 10 மாதங்களில், ஒரு தடுப்பூசி விவகாரத்தில், இத்தனை வேகமான மேம்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக, அமெரிக்காவில் ஒரு தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட 8 ஆண்டுகள் ஆகலாம்.

கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பிப்பது, உலகுக்கு, கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என, பிஃபிசர் சி.இ.ஓ ஆல்பர் போர்லா சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மருந்துகள் பற்றாக்குறை இருக்கலாம், இருப்பினும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம்தான், யாருக்கு முதலில் மருந்து கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும்.

இந்த ஆண்டுக்குள், ஐரோப்பிய ஒன்றியம் வேகமாக செயல்படலாம் என, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சில எச்சரிக்கைகள் உள்ளன என்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மருந்தகவியல் நோயியல் பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ் சொல்கிறார். எஃப்.டி.ஏ மற்றும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) என இரண்டு அமைப்பும் "மிகவும் கவனமாக கொரோனா தடுப்பு மருந்தை மதிப்பீடு செய்யும்" என்கிறார்.

பிபிசி சுகாதார நிருபர் நவோமி கிரிம்லி கூறுகையில், இந்த தடுப்பூசி இன்னும் பரவலான பயன்பாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஏனெனில் இது முன்னர் அங்கீகரிக்கப்படாத ஒரு சோதனை தொழில்நுட்பத்தின் அடிப்படையை பின்பற்றுகிறது என்கிறார்.

கோவிட்-19 தடுப்பூசி: பிற தடுப்பு மருந்துகள் நிலவரம்
அமரிக்காவின் 'மாடர்னா' என்ற மருந்து நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தும் கிட்டதட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துடன் ஒப்பிட்டால், பலன் அளிப்பதில் இது மிகவும் நெருக்கமான நிலையில் உள்ளது என்றே கூறலாம்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் பரிசோதித்து வரும் தடுப்பு மருந்தும் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் நல்ல முடிவையே தந்துள்ளது. இதன் 100 மில்லியன் (10 கோடி) டோஸ்களை பிரிட்டன் அரசு ஆர்தர் செய்துள்ளது.

ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 எனும் தடுப்பு மருந்தும் ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராசெனீகா மருந்தைப் போலவே பலன் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீர்தான் மிகப்பெரிய பிரச்சனை… 12 வயது சிறுமிக்கு இப்படி ஒரு நோயா?