Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம்!!

பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம்!!
, புதன், 19 மே 2021 (08:44 IST)
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

 
இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் நாளை (மே 19) முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அதிக ஆபத்துடைய கொரோனா திரிபுகள் இருப்பதாகவும், அவை குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டார். இத்தகைய வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ளூர்த் தொற்றின் மூலமாக 38 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லாமல், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச சமூகத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
 
இவற்றுள் 18 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் 10 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட 38 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தொற்றுத் திரள் (கிளஸ்டர்) டியூஷன் மையம் ஒன்றில் இருந்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த புதிய வகை கொரோனா திரிபு குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். எனினும் எத்தனை குழந்தைகளை இந்த வைரஸ் திரிபு தொற்றியுள்ளது என்பது தெரியவில்லை என்றார் அவர்.
 
"தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சில உருமாறிய திரிபுகள் வேகமாகப் பரவுகின்றன. அவை குழந்தைகளை அதிகம் தாக்குவதாகக் கூறப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் நமது நடமாட்டத்தையும் ஒன்றுகூடுதல்களையும் கணிசமான அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்," என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
 
எனினும் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவிகரமாக இருக்க இந்த ஏற்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டவ்-தேவ் புயலால் 6 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு: பிரதமர் இன்று நேரில் ஆய்வு