Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை' தாலிபனின் புதிய விதிமுறை

'தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை' தாலிபனின் புதிய விதிமுறை
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தாலிபான்கள் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் கூட தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணிந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் தலையை மறைத்துக் கொள்ள என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும் என்கிற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
 
தாலிபனின் இந்த புதிய விதிமுறைகள் தெளிவாக இல்லை என்றும் அதை புரிந்துகொள்ள விளக்கங்கள் தேவை என்றும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
 
கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தாலிபன். அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் மெல்ல கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருவதாக பலரும் அஞ்சுகின்றனர்.
 
அமெரிக்கா உட்பட மேற்குலக படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில வாரங்களிலேயே, இளம்பெண்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வராமல் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
 
1990 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபன்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பணி இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு மறுத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
 
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தாலிபன் அரசு 8 புதிய விதிமுறைகளை விடுத்துள்ளது.
 
ஷரியா சட்டங்கள் அல்லது இஸ்லாமிய சட்டங்கள், ஆப்கானிஸ்தானின் மதிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரானவை ஆக கருதப்படும் படங்களுக்கு தடை.
 
ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொளி படங்களுக்கு தடை.
 
மதத்தை கொச்சைப்படுத்தும் அல்லது ஆப்கானியர்களைகப் புண்படுத்துவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் தடை.
 
வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது... ஆகியவை தாலிபன் வெளியிட்ட விதிகளில் ஒன்று.
 
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்படிப்பட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பின் உறுப்பினரான ஹுஜதுலா முஜாதேதி கூறினார்.
 
தாலிபான்களின் புதிய விதிமுறைகளில் சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது, அதையும் மீறி விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால் தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருக்கும் என அவர் பிபிசியிடம் கூறினார்.
 
பெண்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வரக் கூடாது என்கிற உத்தரவின் மூலம், தன் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்வி கற்பதற்கு தடை விதித்துள்ள உலகின் ஒரே நாடாக உள்ளது ஆப்கானிஸ்தான்.
 
பெண்கள் கல்வி நிலையங்களுக்கு வருவது மற்றும் பணியிடங்களுக்கு வருவது தொடர்பாக இருக்கும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என்றும், அனைத்து பணியிடங்கள் மற்றும் கல்வி நிலைய சூழல் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யத்தான் இந்தத் தடை என்கிறது தாலிபன்.
 
பெண் நகராட்சி ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு காபூல் நகரத்தின் மேயர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாமீன் மனுவை எதிர்த்து மேல்முறையீடு... சிக்கலில் ஆர்யன் கான்?