Publish Date: Wed, 12 Feb 2020 (12:50 IST)
Updated Date: Wed, 12 Feb 2020 (12:53 IST)
ஆஸ்திரேலியாவில் 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் இந்த விலங்கு இனங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள் அழிந்துள்ளதால் இந்த உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆறுதல் தரும் விஷயமாக எந்த விலங்கினமும் அழிந்துவிடவில்லை என்கிறது அந்நாட்டு அரசு.
ஆனால் விலங்குகள் 30 சதவீதம் அளவிற்கு தங்களின் இருப்பிடங்களை இழந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் கோடைக் காலத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டது.
முன்னதாக இந்த காட்டுத்தீயில் சுமார் 100 கோடி விலங்குகள் வரை அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதில் சில விலங்குகள் ஏறக்குறைய தங்களின் இருப்பிடத்தை மொத்தமாக இழந்துள்ளதால் அதற்கு உடனடியாக உதவி கிடைக்காவிட்டால் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.
இந்த தகவல்கள் ஒருபக்கம் வெளியிடப்பட்டாலும், இன்னும் பல பகுதிகள் உள்ளே சென்று ஆய்வு செய்ய ஆபத்தானதாக உள்ளதால் மேலும் பல விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.