Publish Date: Tue, 19 Mar 2019 (17:18 IST)
Updated Date: Tue, 19 Mar 2019 (17:22 IST)
பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத்து மூக்கி திமிலங்கலம் ஒன்றை டி போன் கலெக்டர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் மீட்டனர். தங்களது முகநூல் பதிவில் "இதுவரை ஒரு திமிங்கலத்தின் உடலில் இத்தனை பிளாஸ்டிக்கை கண்டதில்லை" என்று அந்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
திமிங்கலத்தின் வயிற்றில் 16 அரிசி பைகளும், பல ஷாப்பிங் பைகளும் இருந்தன. திமிலங்கத்தின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பொருட்களின் தகவல்களும் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் அந்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
"திமிலங்கத்தின் உடலில் இருந்த பிளாஸ்டிக் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது." என அந்த அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டேரெல் ப்ளாட்ச்லெ சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவுகள், பிலிப்பைன்ஸ் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. 2015 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் குறித்து பிரசாரம் செய்யும் பெருங்கடல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மெக்கென்சி மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, பெருங்கடல்களில் சேரும் 60 சதவிகித பிளாஸ்டிக், சீனா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து ஆசிய நாடுகளில் இருந்து வருகிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கடலில் சேரும் கழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில் ஒரு தசாப்தத்தில் மூன்று மடங்காக அது உயரும் என பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்ட சில தினங்களில் அந்த திமிலங்கலம் இறந்த செய்தி வெளியானது.