Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் : 36 நாட்கள் வென்டிலேட்டரில் போராடியவர் உயிர் பிழைத்தது எப்படி?

கொரோனா வைரஸ் : 36 நாட்கள் வென்டிலேட்டரில் போராடியவர் உயிர் பிழைத்தது எப்படி?
, வெள்ளி, 5 ஜூன் 2020 (00:16 IST)

ஆளரவமற்ற கல்கத்தா நகரத் தெருக்களின் வழியாக தமது மருத்துவமனைக்கு காரில் சென்றுகொண்டிருந்த டாக்டர் சாஸ்வதி சின்ஹா நோயாளி ஒருவரின் மனைவியை செல்பேசியில் அழைத்தார். ''இன்றைய இரவை கூட உங்கள் கணவர் தாண்டுவாரா என்று தெரியவில்லை, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

52 வயதான நித்தாய்தாஸ் முகர்ஜி உடல்நலம் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவின் ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் கடந்த மார்ச் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வீடற்றவர்களையும் ஆதரவற்றவர்களையும் மீட்டு மறுவாழ்வு அளிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.

மார்ச் 30-ஆம் தேதி மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதே நித்தாய்தாசிற்கு கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் இருந்தன. அவரின் நுரையீரல்கள் மிகவும் மோசமாக வீக்கமடைந்திருந்தது எக்ஸ்ரேவிலேயே தெரிந்தது. அவரின் எந்த உடலுறுப்புகளுக்கும் ஆக்சிஜன் போகாத வகையில் சளி அடைத்திருந்தது நன்கு தெரிந்தது.

அன்று இரவே ஆக்சிஜன் அளவை அதிகரிக்க தேவையான சிகிச்சையும், சக்கரை நோய்க்கு தேவையான மருந்தும் நித்தாய்தாஸுக்கு அளிக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு தேவையான மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.அடுத்தநாள் மாலை வந்த பரிசோதனை முடிவில் நித்தாய்தாஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட அந்த நேரத்தில் நித்தாய்த்தாஸ் கடுமையான சுவாச பிரச்சனையில் தவித்து வந்தார்.

பொதுவாக ஒருவரது உடலில் ஆக்சிஜன் ஏற்பு அளவு 100 முதல் 94 சதவீதம் வரை இருக்கும். ஆனால், நித்தாய் தாசுக்கு 83 சதவீதம் அளவுக்கு குறைந்தது.
ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 முறை சுவாசிப்பதே இயல்பு. ஆனால் நித்தாய்தாஸ் 50 முறை சுவாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நித்தாய்தாசுக்கு வெண்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 வாரங்கள் வெண்டிலேட்டரிலே வைக்கப்பட்டார். மூன்று வாரங்கள் நித்தாய்தாஸ் கண் விழிக்கவே இல்லை.
ஒரு விதத்தில் நித்தாய்தாஸ் மிகவும் அதிஷ்டசாலி. ''பெரும்பாலான கோவிட் 19 நோயாளிகள் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்ற பிறகும் குணமடைவதில்லை, உயிரிழக்கின்றனர்'' என பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த வெண்டிலேட்டர்கள் உதவுவதில்லை என்றும் பரவலாக கருத்து நிலவுகிறது.


நித்தாய்தாஸ் வெண்டிலேட்டரில் இருந்தபோது அவரின் தசைகளும் ஆபத்தான நிலைமையை அடைந்தன. உடலில் பல மருந்துகள் செலுத்தப்படுவதால் நோயாளிகள் தாங்களாகவே சுவாசிக்க முயற்சிக்க முடியாத முடக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள். நித்தாய்தாஸும் இந்த நிலையில் தான் இருந்தார்.
 
வெண்டிலேட்டரில் இருந்தபோதே ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதயத் துடிப்பும் குறைந்தது. இரத்த அழுத்தம் சரிந்தது. இத்தனை பாதிப்புகளால் நித்தாய்தாசுக்கு ஒரு புதிய தொற்று ஏற்பட்டது.

இவ்வாறு புதிய தொற்றை கட்டுப்படுத்த இரத்த குழாய்களுக்குள் நேரடியாக நுண்ணுயிர்க்கொல்லிகள் செலுத்தப்பட்டன. மூன்று மணி நேரத்திற்குள் நித்தாய்தாசின் உடல்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நித்தாய்தாசின் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் மிகவும் சோர்வு அடைந்ததாக தீவிர சிகிச்சை பிரிவில் 16 ஆண்டுகளாக பணியாற்றும் மருத்துவர் சின்ஹா கூறுகிறார்.

நான்கு பேர் கொண்ட குழுவாக நித்தாய்தாசுக்கு சிகிச்சை அளித்தோம். ஒவ்வொரு நிமிடமும் நித்தாய்தாசின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா என மானிட்டரில் கண்காணித்துக்கொண்டே இருந்தோம் என்கிறார் மருத்துவர் சின்ஹா. அன்று இரவு 2 மணிக்கு நித்தாய்தாசின் உடலில் முன்னேற்றம் இருந்ததால், சற்று நிம்மதியுடன் தன் அலைபேசியை பார்த்தபோது, அவரின் மனைவி அபராஜிதா 15 முறை கால் செய்திருந்தார் என்கிறார் மருத்துவர் சின்ஹா.
''என் வாழ்நாளின் மிகவும் மோசமான இரவாக அந்த இரவு அமைந்தது. என் கணவர் உயிரிழந்துவிட்டார் என்றே நினைத்தேன்'' என்கிறார் அபராஜிதா.

அன்று இரவு மிக பெரிய ஆபத்தில் இருந்து நித்தாய்தாஸ் காப்பாற்றப்பட்டாலும், அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது என்கிறார் மருத்துவர் சின்ஹா.

பொதுவாக மலேரியா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, வைட்டமின்கள், நுண்ணுயிர்கொல்லிகள் மற்றும் மயக்க மருந்துகளுடன் சேர்த்து நித்தாய்தாசுக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையேவே இல்லை என மருத்துவர் சின்ஹா கூறுகிறார்.

''நித்தாய்தாசின் தீவிர சிகிச்சை பிரிவின் அலாரம் ஒவ்வொரு நாள் நள்ளிரவு ஒலிக்கும். அலாரம் ஒலித்தால் உடல்நிலையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம். ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கலாம், இரத்த அழுத்தத்தில் பாதிப்பு இருக்கலாம். ஆனால் எந்த பாதிப்பாக இருந்தாலும் அது சீராகி மெதுவாகவே இயல்வு நிலைக்கு திரும்பும். நித்தாய்தாஸ் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகே கொரோனா தொற்று குணமடைவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன'' என்கிறார் மருத்துவர் சின்ஹா.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நித்தாய்தாசின் மனைவி மற்றும் அவரின் சகோதரி காணொளி அழைப்பில் அழைப்பு விடுத்தபோது எதிர்பாராத விதமாக மயக்கத்தில் இருந்து தெளிந்து கண்விழித்து நித்தாய்தாஸ் காணொளி மூலம் அவரின் மனைவியை பார்த்தார். இதுவே அவரின் உடல்நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக இருந்தது என்கிறார் மருத்துவர் சின்ஹா.
அந்த நேரத்தில் தனக்கு என்ன நடந்தது என்றுகூட தெரியவில்லை, யாரோ ஒருவர் நீல நிற ஆடையில் தன் முன் நிற்பது தெரிந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தன்னை கயிறால் கட்டிப்போட்டது போல் இருந்தது என அந்த தருணம் குறித்து தனக்கு நினைவிலிருந்தவற்றை நித்தாய்தாஸ் குணமடைந்த பிறகு மருத்துவர் சின்ஹாவிடம் விவரித்துள்ளார்.

ஏப்ரல் மாத இறுதியில் வெண்டிலேட்டர்களை அகற்றிவிட்டு நித்தாய்தாஸால் சுவாசிக்க முடிகிறதா என பரிசோதிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் அகற்றப்பட்டவுடன் அரை மணிநேரம் நித்தாய்தாஸ் சுவாசித்தார். எனவே மே 3ம் தேதி முழுமையாக வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

தற்போது நித்தாய்தாஸ் வீடு திரும்பி புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார். மேலும் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு என்னவெல்லாம் நடந்தது என்பதையும் தற்போது நினைவுகூர்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக தவித்து வந்த ஏழைகளுக்கு உதவி செய்ய அலைந்துகொண்டு இருந்ததாகவும். முதலில் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறுகிறார். ''எப்போதும் இல்லாத அளவுக்கு நீண்ட நேரம் தூங்கினார், மிகவும் அசதியாக காணப்பட்டார், பிறகு மெதுவாக சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டது'' என நித்தாய்தாசின் மனைவி சில அறிகுறிகள் குறித்து விவரித்தார்.

தன்னால் இயல்பாக சுவாசிக்க முடிகிறது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் நித்தாய்தாஸ் முகர்ஜி. '' நான் கொரோனா வைரஸுடன் போராடி குணமடைவதற்கு, மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையாக போராடியுள்ளனர்'' என்று கூறுகிறார் நித்தாய் தாஸ்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முடிந்து அக்டோபர் மாதம் முதல் மனிதர்கள் மீது பரிசோதனை...