தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
தமிழகத்தில் 2வது விதைப்பருவம் முடிவடைய உள்ளது. மழை சரியாக இல்லாததால் அதிகளவில் மகசூல் கிடைக்காது என்பது நிச்சயம். இதைத் தவிர்த்து இனி வரும் மாதங்களில் எந்தளவு மழை இருக்கும். 3வது விதைப்பருவம் செழிப்பாக இருக்குமா?
விரோதி ஆண்டுக்கான பலன்களிலேயே உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறியிருந்தோம். தற்போது விவசாயம் கொஞ்சம் சீரழிந்துள்ளது உண்மைதான். எனினும், இனி வரும் காலத்தில் சற்றே செழிப்பு ஏற்பட்டால் மட்டுமே பயிர் விளைச்சல் இருக்கும்.
அக்டோபர் 27ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதன் பின்னர் விவசாயத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
ஆந்திரா, கர்நாடகாவில் பெய்தது போல் தமிழகத்தில் கனமழை பெய்ய சாத்தியங்கள் உள்ளதா?
ஜோதிடப்படி அக்டோபர் 9ஆம் தேதி முதல் மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தென் தமிழகத்தில் துவங்கும் மழை உள்தமிழகம் உள்ளிட்ட பகுதியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி அக்டோபர் 10ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். மழைக்கோள் என்றழைக்கப்படும் சுக்கிரன் பெயர்ச்சியடைவதால், அன்று துவங்கி ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.