தமிழ்.வெப்துனியா.காம்: கற்பக விருட்சம் என்று சொல்கிறார்களே இதன் உண்மை என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: காமதேனுவை தெய்வலோகப் பசு என்று சொல்கிறோம். அதுபோல மரங்களில் கல்ப விருட்சம் என்று சொல்வார்கள், அதைத்தான் கற்பக விருட்சம் என்று சொல்கிறார்கள். பொதுவாக சில நூல்கள் என்ன சொல்கிறது என்றால், கல்ப விருட்சமாக பனை மரத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால் இவர்கள் குறிப்பிடுகிற கல்ப விருட்சம் என்பது தேவலோகத்தில் இருக்கக் கூடியது. தேவேந்திரனுடைய இடத்தில் இருக்கக்கூடியது.
அதாவது, நினைத்ததைத் தரும். அங்கு உட்கார்ந்து என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே நீங்கள் ஆகிவிடுவீர்கள். என்ன நினைக்கிறீர்களோ அது கிடைக்கும். இது எதற்காகச் சொல்லப்பட்டுள்ளதென்றால், நேர்மையான எண்ணங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனையோடு நாம் இருந்தால் நமக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். அந்த எண்ணத்தை மக்களிடம் பரப்புவதற்காகத்தான் தேவர்கள் அதுபோன்று ஒன்றை உருவாக்கினார்கள்.
சிலர் குரங்கு புத்தி, நாய் புத்தி, நரி புத்தியுடன் இருப்பார்களே, அதெல்லாம் இல்லாமல் இதுபோன்ற ஒரு இடம் இருக்கிறதென்றால், அந்த நேரத்திலாவது நல்ல புத்தி, நல்ல சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது உருவாக்கப்பட்டது. அன்ன பட்சி தற்போது மறைந்துவிட்டது போல, இதுபோன்ற மரங்களெல்லாம் தற்போது அழிந்துவிட்டது.