தமிழ்.வெப்துனியா.காம்: ஒவ்வாரு உடலிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருக்கிறது என்று ஒரு சாமியார் சொல்லியிருப்பதாக செய்தி வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: உடலிற்கு தெய்வம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. ஏனென்றால், தெய்வத்தைப் பொறுத்தவரையில் உடலை அடிப்படையாக வைத்து எதுவும் கிடையாது. நிறைய திருமூலர்களெல்லாம் ஊனுடம்பே ஆலயம் என்று சொல்லியிருப்பதெல்லாம் வேறு விஷயம். தாயுமானவர், நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர் பூசிக்கொள்ள வாராய் பரபரமே என்று சொல்கிறார். இவர்களெல்லாம், நெஞ்சுக்குள் இறைவன் என்று சொல்கிறார்கள், அவ்வளவுதான். தவிர, உடலிற்கு ஒரு தெய்வம் இருப்பது என்பதெல்லாம் உண்மை கிடையாது.
இந்த உடல் அம்பாளுக்கு உரியது, இந்த உடல் சிவனுக்கு உரியது, இந்த உடம்பிற்குள் சிவன் வருவார், அந்த உடம்பிற்குள் அய்யனார் வருவார் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அறியாமையைப் பயன்படுத்தி சிலர் இதுபோன்றெல்லாம் சொல்கிறார்கள். இறைவன் அனைத்தையும் கடந்தவன். எல்லாவற்றையும் கடந்தவன். உடலைப் பார்ப்பவன் இறைவன் அல்ல, உள்ளத்தைப் பார்ப்பவன் இறைவன். அதனால்தான் ஆண்டவன் முன் அரசனும் ஆண்டியும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்க அடையாளங்களை வைத்தெல்லாம் அரசன் என்றெல்லாம் இறைவன் முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் கிடையாது. உள்ளத்தைப் பார்த்துதான் இறைவன் அனைத்தையும் செய்கிறார்.