தமிழ்.வெப்துனியா.காம்: வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொறிக்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள். ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொறிப்பது போன்றவற்றை அனுமதிக்கலாமா? ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் திடீரென்று ஆமை வந்துவிட்டுப் போனது. உடனே எனக்குப் ஃபோன் செய்தார்கள். உங்கள் வீட்டில் என்னமோ எதிர்மறை சக்தி இருக்கிறது என்று சொன்னேன். ஏனென்றால், எதிர்மறைக்கு எதிர்மறை தெரியும். அதனால் அது சரியாக கண்டுபிடிக்கிறது. அதற்கடுத்து ஒரு வாரம் கழித்து வெளவால் வந்து பறந்துவிட்டுச் சென்றிருக்கிறது. இத்தனைக்கும் பழமையான கட்டடம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், கட்டி மூன்றரை வருடம்தான் ஆகிறது. அதன்பிறகு பிரசன்னம் பார்த்துவிட்டு ஒரு சில விஷயங்களைச் சொன்னேன். பூமிக்கு அடியில் சில விஷயங்கள் இருக்கிறது. நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதன்படி அவர்களும் தோண்டிப் பார்த்தார்கள். அந்த இடத்தில் ஒரு எலும்பு இருந்தது. அந்த வீட்டிற்கு அடியில் அது கிடைத்தது. ஆற்காடு பக்கத்தில் 4 கி.மீ. தூரத்தில் அந்த கிராமம் இருக்கிறது. தற்பொழுதும் அந்த வீடு இருக்கிறது. அதன்பிறகு அதற்காக சிலவற்றை செய்தார்கள்.
அதனால், இயற்கையில் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. என்னுடைய தாத்தா நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும். இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.