தமிழ்.வெப்துனியா.காம்: சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். மேலும் ஒத்த உருவத்தில் சிலர் பிறப்பதையும், அவர்களைப் போன்றே நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களின் ஜாதகம், அவர்களின் ஜாதகத்தின் ஆதிக்கத்தில் இருக்குமா? இல்லை அவர்களுடைய ஜாதகத்தில் இவர்கள் பிறப்பார்களா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அறிவியல்பூர்வமாகச் சொல்லப்போனால் முன்னோர்களுடைய குரோமோசோம்ஸ், ஜீன்ஸ் காரணமாக இருப்பதைச் சொல்லலாம். மரபியல் கூறுகளின் அடிப்படையில் தொடர்கின்றன என்று சொல்லலாம்.
பொதுவாக லக்னத்தில் என்ன கிரகம் இருக்கிறதோ அது தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது. லக்னத்தில் சனி உட்கார்ந்திருந்தால் தாத்தா, பாட்டியைக் கொண்டுவரும். லக்னத்தில் புதன் இருந்தாலோ அல்லது பூர்வ புண்ணிய அதிபதி உட்கார்ந்திருந்தாலோ தாய்வழி உறவுகளில், தாய்மாமன் மாதிரி, அத்தை மாதிரி உறவுகளைக் கொண்டுவரும். அந்தக் குழந்தைகளுக்கு தாய்வழி உறவுகளுடைய ஜீன் அதிகமாக இருக்கும். முன்னோர்களைப் போல் இருந்தால், அது சனியினுடைய ஆதிக்கம் அதிகம் இருந்தால் கொண்டுவரும். அதாவது, தாத்தா, தாத்தாவினுடைய அப்பா, முப்பாட்டன்களைக் கொண்டுவருவது சனி. ஏனென்றால், அவர்தான் பழமைக்கும், மரபு சார்ந்த நடவடிக்கைகள், பண்பாடு சார்ந்த நடத்தைகள் போன்று பிறப்பதற்கு காரணம் சனிதான். இதையெல்லாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
ஒருவர் வந்திருந்தார். என்னுடைய அப்பா பிறந்த தேதி, நட்சத்திரத்திலேயே இவன் பிறந்திருக்கிறான். பார்ப்பதற்குக் கூட என்னுடைய அப்பா சாயலில்தான் இருக்கிறான். அந்தக் குழந்தைக்கு சந்திரன், சனி இரண்டும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல சந்திரன், சனி சேர்க்கை இருந்தாலும் பாட்டன், பாட்டியைக் கொண்டுவரும். இதுபோல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு அமைப்பிற்கு உரிய கிரகமாக இருக்கிறது.
சூரியன் என்றால் பிதா, தகப்பனார். சந்திரன் மாதா. செவ்வாய் சகோதரக்காரகன். புதன் தாய்மாமன், அத்தை, அம்மான் இதற்கெல்லாம் உரிய கிரகம். குரு என்னவென்றால், மானசீகமாக யாரை நினைத்துக் கொண்டிருக்கிறோமே அவர்களாக வந்து பிறப்பது. அந்த வடிவத்தில் இருப்பது.
ஒரு பெண்ணிற்கு முன்னணி ஹீரோ ஒருவரை மிகவும் பிடிக்கும். குழந்தையும் அவரைப் போலவே பிறக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன் என்று சொல்கிறார். என்னம்மா, ஒரு பொறியியல் பட்டதாரி இப்படி பேசலாமா? என்றால், இல்லை சார் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார். இதுபோல விருப்பமாக இருந்தார்களானால், அந்த விருப்பம், குரு பகவான் அதற்குரிய கிரகம். உதாரணத்திற்கு, ஒரு சித்தரிடம் போனார்கள், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்தார்கள். அந்த சித்தரைப் போலவே ஒழுக்கமாகவும், இறை பக்தியுடனும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்கள். இதுபோன்று தன் விப்பப்படி, முன்மாதிரியாக உள்ளவர்களை உருவாக்குவது குரு. குருவினுடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அந்த மாதிரியான குழந்தைகள் வந்து பிறக்கும்.
இதுதவிர, ராகு கேது என்னவென்றால் கலப்பான குழந்தைகளைக் கொடுக்கும். சில குழந்தைகளை, பிறக்கும்போதே வடநாட்டுப் பெண் மாதிரி பிறந்திருக்கிறாள் என்று சொல்வார்களே அதுபோல. இதுபோன்ற பிறப்பிற்கான ஜீன்களுக்குரிய கிரகம் ராகு கேது. எங்கேயோ, எப்போதே அவர்களுடைய ரத்தத்தில் ஓரமாக ஒட்டிக் கொண்டிருந்த ஜீனை மிகைப்படுத்தி அதை பிரதானமாக்கி ஒரு உருவத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடும்.
இதுபோல சம்பந்தமில்லாத பிள்ளைகள் பிறந்தால் அதை வைத்து அப்பா, அம்மாவை சந்தேகப்படக்கூடாது என்று சொல்கிறீர்கள்.
ஆமாம், கண்டிப்பாக.