கேள்வி: ஒரு குடும்பத்தின் தாய் அல்லது தந்தை நீண்ட காலம் வாழ்ந்து மறைந்த நிலையில், அடுத்த ஓராண்டிற்கு அவ்வாறு மறைந்தவருக்கு செய்ய வேண்டியது என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்:
மறைந்த அந்த பெரியவர்கள், வாழும் போது என்ன செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அதனை உடனடியாக செய்திடல் வேண்டும்.
அவர்கள் நீண்ட காலமாக செய்ய நினைத்தது செய்யப்படாமல் ஏதேனும் இருந்தால், அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு அதனை நிறைவேற்றிட வேண்டும்.
குடும்ப உறுப்பினருக்குத் திருமணம், குல தெய்வத்திற்கு படையலிட்டு கும்பிடுதல், குறிப்பிட்ட கோயிலிற்குச் சென்று பரிகார பூசைகள் ஏதேனும் இருப்பின் செய்தல், மறைந்தவர்கள் நேர்ந்துகொண்ட பிரார்தனைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு செய்து முடிக்கலாம்.
எதைச் செய்தாலும் உற்றார் உறவினர் அனைவரும் கலந்துகொள்ள செய்து முடிக்க வேண்டும், இது மிக முக்கியமானது. குடும்பமாக தனித்து செய்திடல் கூடாது.
கேள்வி: குல தெய்வத்திற்கு படையலிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்திருப்பின் அதனை இந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றலாமா? ஓராண்டுக் காலம் துக்கத்திற்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே?
கே.பி. வித்யாதரன்:
நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். அவர்களின் ஆத்மா வாழ்த்திக் கொண்டிருக்கும். எனவே, ஒரு மாத கால துக்கம் போதுமானது.
நான் ஏற்கனவே கூறியபடி, குடும்பத்தினர் மட்டும் தனித்து குல தெய்வ வழிபாடு செய்யக் கூடாது, உற்றார் உறவினர் புடை சூழ அதனை நிறைவேற்றிடல் வேண்டும்.