தமிழ்.வெப்துனியா.காம்: குருப் பெயர்ச்சி நடந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் உற்பத்தி எந்த அளவிற்கு இருக்கும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட வளரும். வேளாண் உற்பத்தி, உணவு உற்பத்தி எல்லாமே திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும், இயற்கை சீற்றங்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டபடி, அதன்மூலம் உணவு உற்பத்தி குறைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
திடீர் கன மழை, வெள்ளப் பெருக்கு, காலம் தவறிய மழை, அதாவது வடகிழக்குப் பருவ மழை, தென்மேற்குப் பருவ மழை போன்றவை சரியான காலத்தில் பெய்யாமல் அறுவடை காலத்தில் மழை, விதைக்கும் காலத்தில் பெய்யத் தவறுவது போன்ற சில மாற்றங்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ஏனென்றால் குரு பகவான் மேஷத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மேஷம் என்பது சரவீடு. சரம் என்பது அடுத்தடுத்த மாற்றங்களை உண்டு பண்ணக்கூடியது. அதனால் நிலையான வளர்ச்சி என்று சொல்ல முடியாது. வளர்ச்சி உண்டு, ஆனால் திடீரென்று உணவுப் பொருள், தானிய உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
விளைந்த தானியம் வீட்டுக்கு வந்து சேர்ந்தால்தான் உறுதி என்று சொல்வார்களே, அதுபோலத்தான் நிலைமை இருக்கும். அதனால் வெள்ளப் பெருக்கால் தானிய உற்பத்தி பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார வளர்ச்சி கணிசமாக உண்டு. வங்கிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். வாராக் கடன்கள் வசூலிக்கப்படும்.
இப்படி இந்த குருப் பெயர்ச்சி ஓரளவிற்கு சாதகமானப் பலன்களை உருவாக்குவார்.