தமிழ்.வெப்துனியா.காம்: இந்தியாவினுடைய தொழிலக உற்பத்தி (Industrial Production) வளர்ச்சி தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு பல்வேறுபட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். உள்ளபடியே இந்தியாவின் தொழிலக உற்பத்தி, தொழிலக நிலை என்பது எப்படிப் போகும், எப்படி இருக்கும் எதிர்காலத்தில்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்த விஷயத்தில் சாதகமாக எதிர்பார்க்க முடியாது. அடுத்தடுத்து இன்னமும் மோசமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறையும். உணவு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால், அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி அடுத்தடுத்து சரிவை நோக்கிச் செல்வதற்குதான் வாய்ப்புகள் உள்ளது. இதனை விவசாயம் மூலமாக தூக்கி நிறுத்த முடியும். ஏற்றுமதி மூலமாக தூக்கி நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. குறிப்பாக அதிலும் உணவு உற்பத்தி அதிகரித்து சரிகட்ட வாய்ப்பு உள்ளது.
ஆனால் ஆட்சியாளர்கள் ஜாதகம் சரியில்லாத நிலையில் இதனை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்று சொல்வார்கள். ஆட்சியாளர்கள் ஜாதகம் வலுவடையும் போது, நல்ல திசை நடக்கும்போது பருவ மழை தவறாமல் பொழியும். விளைந்த பொருளும் அழிவில்லாமல் வீடு வந்து சேரும். தற்பொழுது அந்த நிலை இல்லாத காரணத்தால், தொழிலக வளர்ச்சி சதவிகிதம் குறைவை நோக்கித்தான் செல்லும்.