தமிழ்.வெப்துனியா.காம்: இலங்கை அரசிற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் 3 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். போர்க்குற்றம் என்று அறிவி, பொருளாதாரத் தடை, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டது. இந்த தீர்மானங்கள், தற்பொழுது தமிழக முதலமைச்சர் எடுத்துவரக்கூடிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் எதிர்பார்க்கின்ற பலனைத் தருமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஏனென்றால், தற்பொழுதுள்ள முதல்வருக்கு இராகு திசை நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு இராகு திசை ஏறக்குறைய ஒன்றரை வருடம் இருக்கப் போகிறது. அவருக்கு இராகு பிறக்கும் போது மேஷத்தில் அமர்ந்திருக்கிறது. இதுபோன்று மேஷத்தில் இராகு இருந்து இராகு திசை நடக்கிறவர்கள் துணிச்சலான முடிவுகளெல்லாம் எடுப்பார்கள்.
மேலும் அவருக்கு தற்பொழுது சந்திர புத்தி, அதற்கடுத்து செவ்வாய் புத்தி. தற்பொழுது இராகு திசையில் சந்திர புத்தியில் பெரிய வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். அடுத்து செவ்வாய் புத்தி வருகிறது. செவ்வாய் போர்க்களத்திற்கு உரிய கிரகம். அதனால், இரத்தம் சிந்தியவர்கள், அநியாயமாக நசுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய கிரகம் செவ்வாய்.
தன் உரிமைகள் இழந்து தவியாய் தவிப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக முதல்வருக்கு தசா புத்தி பிரகாரம் அதிகமாகவே வரும். அதனால் இவர்கள் மூலமாக பெரிய மாற்றத்தை ஈழத் தமிழர்கள் வாழ்வில் எதிர்பார்க்கலாம். அதேபோல், இவர்கள் மூலமாக மிகப்பெரிய தீர்வையும் எதிர்பார்க்கலாம்.