Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஷ்டமா சித்திகளை வரமாக கேட்ட கார்த்திகை பெண்கள்

அஷ்டமா சித்திகளை வரமாக கேட்ட கார்த்திகை பெண்கள்

அஷ்டமா சித்திகளை வரமாக கேட்ட கார்த்திகை பெண்கள்
சிவனின் நெற்றிக்கண்ணில் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள்.

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய இந்த ஆறு பேரும், அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகையான அரிய சக்தி களைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
 
அந்த அரிய சக்திகளைப் பெறும் எண்ணத்துடன், அவர்கள் 6 பேரும் கயிலாய மலைக்குச் சென்றனர். இறைவனிடம், தங்களுக்கு அஷ்டமாசித்திகளைத் தந்தருளும்படி வேண்டினர்.


 
 
யாராக இருந்தாலும், கடுமையான தவங்களை மேற்கொண்டு இறைவனின் அன்பைப் பெற்று, அதன் பிறகே அஷ்டமா சித்திகளை வரமாக பெறுவார்கள். ஆனால் இந்த கார்த்திகைப் பெண்கள், அப்படி எந்த தவத்தையும் செய்யாமல், நேரடியாக அஷ்டமா சித்திகளை வேண்டி நின்றது சிவபெருமானுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், அவர்கள் 6 பேரும் முருகப்பெருமானை வளர்த்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தார்.
 
சிவபெருமானின் சாபம்
 
சிவபெருமானின் அமைதியைக் கண்ட பார்வதிதேவி, ‘சுவாமி! நம் குழந்தை முருகனை வளர்த்த இந்தக் கார்த்திகைப் பெண்கள், அரிய சக்திகளை வேண்டி நிற்கின்றனர். அவர்களுக்கு அந்த சக்திகளைக் கிடைக்க வழி செய்யுங்கள்’ என்று கார்த்திகைப் பெண்களுக்காக பரிந்துரை செய்தார்.
 
இதையடுத்து கார்த்திகைப் பெண்களைத் தனக்கு முன்பாக அமரச் செய்து, அஷ்டமாசித்திகள் பற்றிச் சொல்லத் தொடங்கினார் சிவபெருமான். சிறிது நேரம் அவர் சொல்வதைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள், பின்னர் அதில் விருப்பமில்லாமல், சுற்றிலும் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டனர். 
 
இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். மீண்டும் வெளி நிகழ்வுகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். இதனால் சிவபெருமானின் கோபம் அதிகரித்தது. என்னை அவமதித்து விட்டீர்கள். கற்றலில் கவனமில்லாத நீங்கள், கற்பாறைகளாக மாறி கவனிப்பாரில்லாமல் பூமியில் பயனற்றுப் புதைந்து போங்கள்’ என்று சாபம் கொடுத்தார். அதன் பின்னர், நானே வந்து உங்களுக்குச் சாப விமோசனமளிப்பேன்’ என்றார்.
 
இதைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் பூமியில் விழுந்து கற்பாறைகளாக மாறிப்போனார்கள்.
 
சாப விமோசனம்
 
பூமியில் கற்பாறைகளாகக் கிடந்த இடத்தில் ஒரு ஆலமரம் இருந்தது. அதிலிருந்து விழுந்த பழங்கள், அந்தக் கற்பாறைகளை முழுவதுமாக மூடிக்கொண்டன. இப்படியே ஆயிரம் ஆண்டுகள் கடந்து போய்விட்டது. அதன்பிறகு ஒருநாள், அந்தக் கற்பாறைகளின் மேல் மூடியிருந்த பழங்கள், தானாக கீழே விழுந்தன. அப்போது பாறைகளின் எதிரில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றினார். ஈசன் பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் ஈசன், அங்கிருந்த ஆலமரத்தின் கீழ், குரு தட்சிணாமூர்த்தியாக தோன்றினார். 
 
‘பெண்களே! அஷ்டமாசித்திகள் எனும் அரிய சக்திகள் உங்களுக்குத் தேவையிருக்காது. அதன் பெருமைகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றபடி, சிவபெருமான் அவற்றிக்கான விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினார். அந்த விளக்கங்களைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள், இறைவனை வணங்கி சிவயோகினிகளாக மாறித் தேவலோகம் சென்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?