தற்காலத்தில் ஈவ் டீஸிங் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. செய்தித் தாளில் இது பற்றி அடிக்கடி வரும் செய்திகளே இதற்கு சான்று. ஆனால் செய்தித் தாளில் வராத சம்பவங்கள் இதை விட அதிகம். காரணம் சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர்கள் பாதிக்கப்படுமே என்ற பயம்தான்.
விசில் அடிப்பதும், கண் அடிப்பதுமாக ஆரம்பித்த இளைஞர்களின் இந்த விளையாட்டு இன்று இளம் பெண்களின் உயிரையே பலிகொள்ளும் அளவுக்கு பயங்கரமாக உருவெடுத்து வருகிறது
நீங்கள் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ? அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி ?
கடைசியில் வருந்துவதை விட முன்பே பாதுகாப்புடன் இருப்பது நல்லது. தனியான இடங்களுக்கு துணையின்றி செல்வதை தவிர்க்கவும்.
நீங்கள் தனியாக ஒரு ஆளில்லாத இடத்தில் நடந்து போகும்போது உங்களை யாரேனும் பின் தொடர்ந்து வந்தாலோ, அல்லது ஈவ் டீஸிங் செய்தாலோ ஓடவோ அல்லது சத்தம்போட்டு உதவிக்கு யாரையாவது கூப்பிடவோ தயங்காதீர்கள்.
நீங்கள் பஸ்ஸில் செல்லும்போது ஈவ் டீஸிங் செய்யப்பட்டால் கண்டக்டரிடம் அல்லது சக பயணியிடம் புகார் கூறவும். அல்லது அடுத்து வரும் கூட்டம் மிக்க பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிடவும். ஆட்கள் அதிகமில்லாத பஸ் ஸ்டாப்பில் இறங்குவதைத் தவிர்க்கவும்.
உங்களை யாராவது அடிக்கடி பின் தொடர்ந்து வந்தாலோ அல்லது தொந்தரவு செய்து வந்தாலோ, உங்கள் பெற்றோரிடம் அல்லது அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அதற்காக நீங்கள் வெட்கப்படத் தேவையில்லை.
இந்திய உடையோ அல்லது மேல் நாட்டு உடையோ, எதை நீங்கள் அணிந்தாலும், அது கண்ணியமானதாக இருக்க வேண்டும், முக்கியமாக நீங்கள் பஸ்ஸிலோ அல்லது இரு சக்கர வண்டியிலோ செல்லும்போது. இல்லையென்றால் ஆண்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, உங்களை டீஸ் செய்யக் கூடும்.
உங்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் ஈவ் டீஸ் செய்பவர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கல்லூரி முதல்வருக்கோ அல்லது காவல் துறையினருக்கோ தகவல் தெரிவியுங்கள்.
மற்றொரு பெண்ணிடம் யாராவது வம்பு செய்தால், அவருடைய உதவிக்கு செல்லத் தயங்காதீர்கள். சூழ்நிலை ஆபத்து மிக்கதாகத் தோன்றினால் மற்றவரையும் உதவிக்கு கூப்பிடுங்கள்.
நீங்கள் மனதுக்குள்ளே, யார் நமக்கு உதவி செய்ய முன் வருவார்கள் என்று எண்ணித் தயங்காதீர்கள். கூப்பிட்டுத்தான் பாருங்களேன், எத்தனைபேர் உங்கள் உதவிக்க ஓடி வருகிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள்.
ஏதேனும் காரணத்தால் ஈவ்டீஸிங் செய்பவர்கள் தொந்தரவு அதிகமாக இருந்தால் அல்லது கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், உங்கள் பயண நேரத்தை மாற்றுங்கள் அல்லது செல்லும் வழியை மாற்றுங்கள். இதனால் உங்களுக்கு அதிக நேரம் செலவாகலாம். ஆனால் அது உங்களுக்கு பாதுகாப்பு மிக்கதாக இருக்கும்.
ஈவ்டீஸ் செய்பவர்களின் தொல்லையை பொறுத்துக்கொள்ளாதீர்கள். அதை எதிர்த்து குரல் எழுப்பத் தயங்காதீர்கள். நீங்கள் பயத்துடன் வாய் மூடிக் கொண்டிருந்தால் அது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.