பெண்ணின் கண்ணியத்தை காக்க நடந்த சம்பவத்தில், மரணம் அடைந்ததை, கொலை குற்றமாக கருதக் கூடாது என்று வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்துள்ளது.
மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இதுபோன்ற தீர்ப்பு நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
ஹரியான மாநிலத்தில் ஹிஸ்ஸார் என்ற ஊரில் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐஸ்வர் என்பவன் மது அருந்திவிட்டு பெண்களின் கண்ணியத்தையும், தன்மானத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டான். இவனின் நடவடிக்கையை ராஜு, மங்கலி என்ற இருவரும் தட்டிக் கேட்டனர்.
இதில் ஏற்பட்ட கைகலப்பில் பெண்களை இழிவுபடுத்திய ஐஸ்வர் தப்பி ஓடினான். ராஜுவும், மங்கலியும் விரட்டி சென்றனர். அவன் பிடிபடும் போது அனில் என்ற பாலி, சச்சா சிங் என்ற இருவரும் வைத்திருந்த கத்தி மீது விழுந்து ஐஸ்வர் மரணமடைந்தான்.
இந்த வழக்கில் ஐஸ்வரை கொலை செய்யதாக இ.பி.கோ 302 சட்டப்பிரிவில் ராஜு, மங்கலி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
இந்த வழக்கை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், சுவாதினர் குமார் ஆகிய இருவரும் விசாரித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலி இருவரின் ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்துள்ளனர்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பெண்களின் கண்ணியத்தை, தன்மானத்தை காக்க நடந்த சம்பத்தில் கொலை செய்யப்பட்டது கொலை குற்றமாக கருதக் கூடாது.
திருமண நிகழ்ச்சியில் குடி போதையில் ஐஸ்வர் பெண்களி்ன் கண்ணியத்திற்கும், தன்மானத்திற்கும் இழிவு ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளான். பெண்களின் கண்ணியத்தை காக்க, ராஜுவும், மங்கலியும் தட்டிக் கேட்ட போது நடந்த சம்பவத்தில் அனில் என்ற பாள்ளி, சுசா சிங் என்ற இருவரிடமும் இருந்த கத்தி மீது தவறி விழுந்து மரணமடைந்துள்ளான்.
ஐஸ்வரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜுவும், மங்கலியும் விரட்டி செல்லவில்லை. பெண்களின் கண்ணியத்தை காக்கவும், ஐஸ்வருக்கு பாடம் கற்பிக்கவுமே உடனடியாக செயல்பட்டுள்ளனர். இதில் ஐஸ்வர் மரணமடைதுள்ளான். இந்த வழக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302 வது சட்டப்பிரிவுகளின் கீழ் அணுக கூடாது. இதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 வது சட்டத்தின் 34 வது பிரிவின் படி அணுக வேண்டும் என்று கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜு, மங்கலின் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, இரண்டு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்தனர். இந்த சம்பவம் நடக்கும் போது, ராஜு 18 வயது நிரம்பாத சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.