ஆணுக்கு நிகராய் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் பெண் சமுதாயத்தை இந்த அளவிற்குத் தூக்கிவிட்டது அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள்தான்.
தனது மகளை பட்டப்படிப்பு படிக்கவும், அயல்நாடுகளில் சென்று கல்வி கற்கவும், ஆயக் கலைகளில் எத்தனை முடியுமோ அத்தனையும் கற்கவும் வீட்டு வாயிலை திறந்து விட்ட தாயே உனக்கு சில வார்த்தைகள்...
தற்போது பணிச் சூழலில் பெண் சமுதாயம் உயர்ந்து உயர்ந்து வானில் பறந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் குடும்பச் சூழலில் எத்தனை பெண்கள் வெற்றி பெறுகிறார்கள்.
நல்ல கல்வி அறிவு, கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல், வேலை இடத்தில் பெரிய பொறுப்பு எல்லாம் பெற்றிருந்தாலும் வீட்டில் அவள் எத்தனை பொறுப்புகளை நிர்வகிக்கும் திறமையை பெற்றிருக்கிறாள்?
படித்து பணிக்குச் சென்றாலும் அவள் ஒரு இல்லத்தரசியாக வாழ்ந்துதானே ஆக வேண்டும்.
அடிப்படையான எத்தனை வேலைகளை தற்போதைய பெண்களுக்கு அவர்கள் வீட்டில் பழகி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெண்களுக்கு சமைக்கத் தெரிந்திருக்கிறது. சமையல் கட்டு பக்கம் கூட என் பெண் வந்ததில்லை என்று தற்போது பெருமை அடித்துக் கொள்கிறார்கள் அம்மாக்கள். இது சரியா?
ஒரு வீட்டை நிர்வகிக்க வேண்டிய பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும், அணுசரித்துப் போகும் பக்குவத்தையும் அன்னைதானே ஊட்டி வளர்க்க வேண்டும்.
எல்லோரையும் மயக்கும் வித்தை பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. சமையல் ருசியாக இருந்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவள் பக்கம்தான். சமைக்கத் தெரியாத பெண்ணை கட்டிக் கொடுத்துவிட்டு, கணவன் வீட்டில் சொல்லும் குறைகளை கொடுமைகளாக நினைத்து கண்ணீர் விடும் பெண்களின் நிலை மாற வேண்டாமா?
ஒவ்வொரு அன்னையும் தனது மகளுக்கு சமைக்கவும், சமையலறையில் இருக்கும் அத்தியாவசிய வேலைகளை செய்யவும், கோலம் போடவும், பூ கட்டவும், தண்ணீர் தூக்க போன்ற வேலைகளை நிச்சயம் சொல்லிக் கொடுத்து அதனை செய்யத் தூண்ட வேண்டும்.
இதெல்லாம் வேலைக்காரியின் வேலை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் இல்லாத நாட்களில் இதுபோன்ற வேலைகளை தாமே செய்து கொள்ளவாவது தயாராக இருக்க வேண்டும்.
எத்தனையோ பெண்கள் குடும்பம் என்ற கோட்டைக்குள் செல்ல பயந்து கொண்டு பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே அவர்களைக் கட்டிக் கொடுத்தாலும் போன இடத்தில் கொஞ்சமும் அணுசரனையாக இல்லாமல் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டு அந்த குடும்பத்தின் நிம்மதியையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஒரு குடும்பத்தின் தலைவன் வேண்டுமானால் ஆணாக இருக்கலாம். ஆனால் குடும்பத்தின் தூண் பெண் தான். அந்த தூணை அலங்காரமாக அமைக்க வேண்டியது மட்டும் ஒரு அன்னையின் கடமையல்ல... அதன் திறனை உறுதியாக்க வேண்டியதும் அன்னைதான்.
எனவே தாயே உன் மகளை சிறந்த பெண்ணாகவும், சிறந்த குடும்பத் தலைவியாகவும் மாற்ற தயாராய் இரு...