மழைக் காலம் முதலே குளிர ஆரம்பித்துவிடுகிறது. இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம்தான். இந்த சமயத்தில்தான் நமது சருமமும், கூந்தலும் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. சருமம் வறண்டு போவதும், கூந்தல் அதிகமாக உதிர்வரும் இந்த காலத்தில் நேரிடும் பிரச்சினைகளாகும்.
எனவே, குளிர்காலத்தில் உடலை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
சருமத்திற்காக நாம் எத்தனையோ மேற்பூச்சுகளை பூசுவோம். ஆனால் எந்த பலனும் இருக்காது. அதற்குக் காரணம், சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையை பொறுத்து மட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
குறிப்பாக,சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதும் அவசியமாகிறது. இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.
மிகவும் குளிரான சமயத்தில் வெளியில் செல்வதானால் உடலை முழுவதுமாக மூடியபடி இருக்கும் ஆடைகளை அணியுங்கள். குளிர் வாட்டுவதால் அதிக நேரம் நெருப்பின் அருகில் அமர்ந்திருப்பதும் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.
தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளித்து முடித்ததும் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது மிக மிக அவசியம்.
குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெப் பசை இழப்பை ஈடு செய்ய உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.
குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊற விடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊற விட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.
குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.
அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக செய்யும் ஸ்ட்ரைட்னிங் ஆகியவற்றால், கூந்தலின் ஈரப்பதம் கெட்டுப் போய் கூந்தல் வறண்டு வெடித்துப் போகலாம். கூந்தலில் இயற்கையான டைகள் பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலை காப்பாற்ற, சில்க் பேப்ரிக் துணிகளை கட்டிக் கொண்டு வெளியில் செல்லலாம்.