திருநங்கையர்கள் கௌரவமாக வாழ விழிப்புணர்வு முகாம்
, வெள்ளி, 3 ஜூன் 2011 (18:07 IST)
சமூகத்தால் பல விதங்களில் ஒதுக்கப்பட்டும், அடக்கி ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வரும் திருநங்கையர்களுக்கு கௌரவமாக வாழ சென்னையில் உள்ள 'ஃபீச்சர்ஸ்' என்ற அழகு நிலைய உரிமையாளர் உமா மகேஸ்வரி செய்துள்ள முயற்சிகளின் பலனாக 17 திருநங்கையர்கள் அழகுக் கலை நிபுணர்களாக உருவெடுத்துள்ளனர்.பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விக்னேஷின் மனைவி உமா மகெஸ்வரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மெரோலின் சகாய ராணி என்ற சமூக சேவகரோடு இணைந்து திருநங்கையர் விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
திருநங்கையர்களுக்கு தமிழக அரசு தக்க உரிமையும், பாதுகாப்பும் வழங்கி வந்தாலும், தனி நபர் அளவில் செய்யும் முயற்சிகளே அவர்களை மற்றவர்களுடன் சரிசமமாக வாழ வைக்க உதவுகிறது என்பதை உமா மகேஸ்வரியும், சமூக சேவகர் மெரோலின் சகாய ராணியும் நிரூபித்துள்ளனர்.திருநங்கையர்களுக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் சிறப்பு சேர்க்கவும், அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக கீழ்நிலையான சில காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.மேற்கூறிய லட்சியத்தை நிறைவேற்ற 45 நாட்கள் அழகுக் கலை பயிற்சி முகாமைத் துவங்கி அதனை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். இதில் சுமார் 17 திருநங்கையர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். 17 திருநங்கையர்களுக்கும் நடிகர் விக்னேஷ் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
திருநங்கையர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சித் துவக்கமும் இன்று முடிவு செய்யப்பட்டது.தனது இந்த முயற்சி குறித்து உமா மகேஸ்வரி கூறுகையில், முதலில் இவர்களைத் தேர்வு செய்து கவுன்சிலிங் என்ற மனோநிலைப் பயிற்சி வழங்கியதாகவும், அதன் பிறகு இவர்களின் திறமை தன்னை அதிசயிக்க வைத்ததாகவும் அந்த அடிப்படையில் இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளித்து மற்றவர்களுடன் சரிசமமாக கௌரவத்துடன் வாழ இவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதாகவும் தெரிவித்தார்.