கேரளாவில் காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வருடத்திற்கு இத்தனை பெண்கள் காணாமல் போகிறார்கள் என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் மூன்று மணி நேரத்திற்கு ஒருவர் விகிதம் காணாமல் போகும் கணக்கு கன்னாபின்னாவென்று எகிறுகிறது.கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய பல்கலைக்கழக சட்டக் கல்வி மாணவர்கள் சமீபத்தில் கேரளாவல் காணாமல் போகும் ஆண், பெண் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வறிக்கையில், வருடந்தோறும் கேரளாவில் காணாமல் போகும் இளம்பெண்ணின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக 18 வயதுக்கு மேல் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள்தான் அதிக அளவில் காணாமல் போகின்றனர்.
18 வயதுக்கு மேல் ஆன இளைஞர்களும் காணாமல் போனாலும் அவர்கள் 2 நாட்களுக்குள் வீடு திரும்பி விடுகின்றனர். ஆனால் பெண்களில் சிலர் 3 மாதங்களுக்கு பின்னர் தான் வீடு திரும்புகின்றனர்.
இளைஞர்களோ, சிறுவர்களோ பிரச்சினைக்கு பயந்தோ அல்லது சண்டையிலே§ வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் பெண்கள் வேறு சிலரின் தூண்டுதலின் காரணமாகத்தான் வீட்டை விட்டு வெளியேறி செல்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு
கேரளாவில் 3 மணி நேரத்திற்கு ஒருவர் காணாமல் போகிறார். ஒரு நாளில் 8 குடும்பங்களில் இருந்து தலா ஒருவர் காணாமல் போகிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டு 1,270 பெண்களும், 2007ல் 2,167 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சுமார் 600 பேரின் கதி என்ன என்று இதுவரைத் தெரியவில்லை.
காணாமல் போவதில் கேரளத் தலைநகர் திருவனந்தபுரம்தான் முக்கிய இடம் வகிக்கிறது. காணாமல் போகும் இளம்பெண்களின் பலர் வழி மாறி விபச்சார கும்பல்களிடம் கிக்கி தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிடுகின்றனர்.
இதைவிட, இன்னுமொரு செய்தி என்னவென்றால், ஆண்டொன்றுக்கு கேரளாவில் சுமார் 600 அனாதை பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதில் காணாமல் போகும் பெண்களும் இருப்பதுதான் பெரும் கொடுமை.
படித்தவர்கள் அதிகம் இருப்பதும், ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கையிலும் முதன்மை இடம் பிடித்துள்ள கேரள மாநிலம், பெண்கள் காணாமல் போகும் கணக்கிலும் முன்னணி வகிப்பது வருத்தத்தை அளிக்கிறது.