Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களால் ஆட்சிக்கு நெருக்கடியா?

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களால் ஆட்சிக்கு நெருக்கடியா?
, செவ்வாய், 6 ஜூன் 2017 (18:09 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களால் முதல்வர் எடப்பாடி அரசின் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.


 

 
தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் மீண்டும் அறிவித்ததை அடுத்து தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் மூன்றாவது ஒரு அணி உருவாகியது. இந்த அணியில் நேற்றே 11 எம்எல்ஏக்கள் இருந்தனர். 
 
இந்நிலையில் இன்று காலை முதலே அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக தினகரனை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோரும் சந்தித்து தங்கள் ஆதரவை தினகரனுக்கு வழங்கினர். 
 
இதுவரை தினகரனுக்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் அந்த அணிக்கு வந்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 134 அதிமுக எம்எல்ஏக்களில் ஓபிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது தினகரன் அணியில் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். மீதமுள்ள 97 எம்எல்ஏக்கள் தான் தற்போது எடப்பாடி அணியில் உள்ளனர். 
 
இந்த 97 பேரில் எத்தனை பேர் தினகரன் அணிக்கு வரும் காலங்களில் செல்வார்கள் என்பது தெரியவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாமல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் ஆட்சி கவிழும் அபாயமும் உருவாகியுள்ளதாக செய்திகள் உலா வருகிறது. 
 
ஆனால் இதற்கு தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை சந்தித்து ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்களிடம், எந்த நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக்கூடாது என தினகரன் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, மூன்றாவது அணி என எதுவுமில்லை. தினகரன் தனது சக்தியை காட்டுவதற்கே இந்த விவகாரங்கள் நடக்கின்றன என அதிமுக வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பருவமழையுடன் சேர்ந்து வரும் எல் நினோ; வானிலை மையம் எச்சரிக்கை