Publish Date: Fri, 09 Jun 2017 (13:59 IST)
Updated Date: Fri, 09 Jun 2017 (14:15 IST)
அதிமுக பொதுச்செயலாளர் தினகரன் நேற்று இரவு திடீரெனெ டெல்லிக்கு சென்றுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட, அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
அதன் பின் அவரை இதுவரை 32 எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் ஆளும் பாஜக அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மத்திய அரசு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள இந்த சூழ்லையில் இது என்ன தனியாக அணி உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பழைய வழக்குகளையெல்லாம் தூசி தட்ட வேண்டுமா? முதலில் டெல்லிக்கு வாருங்கள்.. உங்களிடம் பேச வேண்டும் என அழைத்துள்ளனராம்.
இதன் விளைவாக 3 நாட்களுக்கு என்னை எம்.எல்.ஏக்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என கூறிவிட்டு, நேற்று இரவே டெல்லி சென்றுள்ளார் தினகரன். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தினகரன் டெல்லிக்கு சென்றுள்ளது ஒரு முக்கிய நிகழ்வாகவும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.