Publish Date: Tue, 24 Oct 2017 (14:10 IST)
Updated Date: Tue, 24 Oct 2017 (17:44 IST)
மெர்சல் படத்திற்கு இலவச டிக்கெட் கொடுத்து ஓ.பி.எஸ் கூட்டத்தை தினகரன் ஆதரவாளர் காலி செய்த சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்.பி. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. எனவே, முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எனவே, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளரும், கூடலூர் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகரான அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தியேட்டரில் மெர்சல் படம் இலவசமாக திரையிடப்பட்டது. எனவே, பொதுமக்கள் உட்பட, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலரும் பேதமில்லாமல் குடும்பத்துடன் மெர்சல் படம் பார்க்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஓ.பி.எஸ் தரப்பு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் காத்து வாங்கியது. நேரம் போக போக, மக்கள் யாருமில்லாமல் அனைத்து இருக்கைகளும் காலியாக இருந்தது. இது கேள்விப்பட்ட ஓ.பி.எஸ், கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டதாக கேள்வி..