Publish Date: Mon, 10 Apr 2017 (12:50 IST)
Updated Date: Mon, 10 Apr 2017 (12:52 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி நடக்கவிருந்த இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக மக்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பல வீடியோ ஆதாரங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த டி.டி.வி. தினகரன், “ ஆர்.கே.நகர் தொகுதியில் நான் 70 சதவிகித இடத்தில் எனது பிரச்சாரத்தை முடித்து விட்டேன். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதை தடுப்பதற்காக எதிர்கட்சியினர் சதி வலை பின்னி வந்தனர். அதன் மூலமாகவே தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் நடத்தினாலும், நானே வெற்றி பெறுவேன்” என கூறினார்.
ஆனால், இதுபற்றி ஓ.பி.எஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் கமிஷன் தேர்தலை ரத்து செய்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதில் எங்கள் அணியே வெற்றி பெறும்” என கருத்து தெரிவித்தார்.