தென்மேற்கு வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
ஏப்ரல் 18ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் கன்னியாகுமரி, நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் 23 வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என தெரிவித்திருந்தேன். அதேபோல், ஏப்ரல் 20 முதல் கடந்த 4 நாட்களாக பருவ மழை போல் பலத்த மழை பெய்து வருகிறது.
தென்மேன்று வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தென்கிழக்கு திசையிலும், அரபிக் கடல் பகுதியில் கர்நாடகாவிற்கு தென்மேற்கு திசையிலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தற்போது பெய்யும் மழை ஏப்ரல் 27ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 30, மே 1ஆம் தேதியும் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதி கணிப்பின்படி மே 1ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த கடிதத்தில் ஏப்ரல் 23 நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல் ஏப்ரல் 23இல் சாலமன் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.