தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழ்நாட்டில் பலத்த மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
வெப்துனியாவிற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நாகையை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 6 வரை கடலூர், புதுச்சேரி உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகை மற்றும் கடலூரை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் டிசம்பர் 7ஆம் தேதி மாலை முதல் 9ஆம் தேதி இரவு வரை கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மழை தேதி கணிப்பின்படி டிசம்பர் 14 அல்லது 15 முதல் 17 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். டிசம்பர் 17க்கும் பிறகு மழை பெய்யும் வாய்ப்பு குறையும். கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி டிசம்பர் 9ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.